அமித்ஷாவே ஆந்திராவை விட்டு வெளியேறு! திருப்பதியில் தெலுங்குதேசம் கருப்புக் கொடி போராட்டம்!!
Recommended Video
திருப்பதி : திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பாஜக தலைவர் அமித்ஷா ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய இன்று காலை வந்தார். சாமி தரிசனம் முடித்துவிட்டு விமானம் நிலையம் செல்லும் வழியில் அவர் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பதி அலிபிரி சோதனைச் சாவடி அருகே வந்த அமித்ஷாவின் காரை மறித்து, தெலுங்கு தேசம் கட்சியினர் கருப்புக்கொடி காட்டினர். மேலும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க தொடர்ந்து மறுத்து வரும் மத்திய அரசைக் கண்டித்தும் அவர்கள் கோஷம் எழுப்பினர்.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து பெற்றுத் தருவதாகக் கூறி மோடி மற்றும் பாஜக தலைவர்கள் ஆந்திர மக்களை ஏமாற்றி விட்டதாகவும், உடனடியாக அமித்ஷா ஆந்திராவை விட்டு வெளியேற வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து இரு கட்சித் தொண்டர்களுக்கும் அங்கு மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பாஜக நிர்வாகி ஒருவரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால், அங்கு கலவரம் ஏற்படும் சூழல் உருவானதை அடுத்து அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
அமித்ஷாவின் கார் அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், அங்கு தொடர்ந்து தெலுங்கு தேசம் மற்றும் பாஜக கட்சித் தொண்டர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.