தமிழ்நாடு.. கேரளா.. இப்பொழுது அசாம்.. மோடியை சுழற்றியடிக்கும் கருப்பு கொடி போராட்டம்.. அதிரும் பாஜக
Recommended Video
கவுகாத்தி:அசாம் வந்த பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டி திரும்பி போ மோடி என்று மாணவர்கள் முழக்கமிட்டுள்ளதால் பாஜக தலைமை கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
மத்திய பாஜக அரசு குடியுரிமை சட்ட மசோதாவை சமீபத்தில் லோக்சபாவில் நிறைவேற்றியது. அந்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. மாணவர்கள் உட்பட பலர் மசோதாவை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி 2நாட்கள் சுற்றுப்பயணமாக வடகிழக்கு மாநிலங்களுக்கு வந்துள்ளார். அசாம் மாநில தலைநகர் கவுகாத்திக்கு வந்த அவர் ராஜ்பவனை நோக்கி சென்றார். அப்போது, அசாம் மாணவர் சங்கத்தினர் கருப்பு கொடி காட்டி திரும்பிப் போ மோடி என்று முழக்கமிட்டனர்.
கவுகாத்தி பல்கலைக்கழக வாயில் பகுதியில் திரண்ட மாணவர் சங்கத்தினர், அவருக்கு கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், எம்ஜி சாலை பகுதியிலும் பிரதமருக்கு கருப்பு கொடி காட்டி மாணவர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பிரதமர் மோடியே திரும்பி போ... குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா ரத்து செய் என்ற முழக்கங்களை போராட்டக்காரர்கள் எழுப்பினர். அதனால், அந்த பகுதிகளில் பரபரப்பு நிலவியது.
தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில்தான் மோடிக்கு எதிர்ப்பு இருக்கிறது என்று பாஜக தலைமை நினைத்து வந்தது. ஆனால், தற்போது லோக்சபா தேர்தல் நெருங்கிவரும் வேளையில் வடகிழக்கு மாநிலங்களிலும் அவருக்கு எதிர்ப்பு வலுத்திருப்பது அக்கட்சிக்கு பெரிய தலைவலியாக உருவெடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
பிரதமர் மோடி தமிழகத்திற்கு2 முறை வந்தபோது கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக் உலகளவில் டிரெண்டாகியது என்பது குறிப்பிடத்தக்கது.