சுப்ரீம் கோர்ட்டில் சுப்ரதா ராய் மீது கருப்பு மை வீச்சு: வழக்கறிஞர் கைது
டெல்லி: உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராய் மீது வழக்கறிஞர் ஒருவர் மை வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்.
முதலீட்டாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி திருப்பிக் கொடுக்காதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராய்க்கு உச்ச நீதிமன்றம் ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட்டை கடந்த புதன்கிழமை பிறப்பித்தது. இதையடுத்து ராய் கடந்த வெள்ளிக்கிழமை லக்னோ போலீசாரிடம் சரண் அடைந்தார்.
சரண் அடைந்த அவரை போலீசார் கைது செய்து குக்ரைல் பகுதியில் உள்ள உத்தர பிரதேச அரசின் வனத்துறைக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் தங்க வைத்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அவரை லக்னோவில் இருந்து டெல்லிக்கு சாலை வழியாக இன்று அழைத்து வந்தனர்.
உச்ச நீதிமன்றத்தில் சுப்ரதா ராயை பார்த்து ஒருவர் திருடன் என்று கூறி கருப்பு மை வீசி தாக்குதல் நடத்தினார். இதையடுத்து போலீசார் மை வீசியவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணையில் அவர் பெயர் மனோஜ் சர்மா என்றும், மத்திய பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த அவர் ஒரு வழக்கறிஞர் என்றும் தெரிய வந்துள்ளது. தான் ஊழலை எதிர்த்து போராடுபவன் என்று மனோஜ் தெரிவித்துள்ளார்.
சுப்ரதா ராய்:
உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுப்ரதா ராய் கூறுகையில்,
இந்த வழக்கில் முன்பே நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். முதலீட்டாளர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை 2 மாதத்திற்குள் கண்டிப்பாக கொடுத்து விடுகிறேன். சஹாரா குழுமத்தை நம்பி இருக்கும் பல லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்படக் கூடாது. அதனால் எங்களை காப்பாற்றுமாறு கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். எங்களுக்கு கொஞ்சம் கால அவகாசம் அளியுங்கள் என்றார் கைகளை கட்டிக் கொண்டபடி.
அவரது கூற்றை கேட்ட உச்ச நீதிமன்றம் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்கும் திட்டத்தை சஹாரா தீட்டிக் கொடுக்கும் வரை சுப்ரதா ராயின் காவலை நீட்டிப்பதாக தெரிவித்தது.