சீலிட்ட கவரை திறக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு: கருப்புப் பண "627 முதலைகள்" பட்டியல் உடனே வெளிவராது!
டெல்லி: வெளிநாடுகளில் கருப்புப் பணத்தைப் பதுக்கியோர் 627 பேர் பட்டியல் அடங்கிய கவரை உச்சநீதிமன்றம் திறக்க மறுத்திருப்பதன் மூலம் இந்த 'முதலைகள்" பெயர் உடனே வெளிவர வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.
கருப்புப் பணம் தொடர்பாக மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் உச்சநீதிமன்றம், முன்னாள் நீதிபதி எம்.பி.ஷா தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது. இக்குழுவின் துணைத் தலைவராக நீதிபதி அரிஜித் பசாயத் இடம்பெற்றுள்ளார்.
இந்த நிலையில் மத்திய அரசும் தமது பங்குக்கு கருப்புப் பணத்தைப் பதுக்கியோர் குறித்து விசாரணை நடத்தியது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கைகளில் அவ்வளவாக ஆர்வம் காட்டாத ஒருநிலைதான் வெளிப்பட்டு வந்தது.
மூவர் பெயர் வெளியீடு
வேறுவழியில்லாமல் நேற்று முன் தினம் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையில், தாபர் இந்தியா குழுமத்தின் முன்னாள் இயக்குனர் பிரதீப் பர்மன், கோவா சுரங்க நிறுவன அதிபரான ராதா சதீஷ் டிம்லோ, குஜராத்தின் பிரபல தங்க வியாபாரி சிமன்லால் லோதியா ஆகியோரது பெயரை மட்டுமே தாக்கல் செய்தது.
மத்திய அரசுக்கு கண்டனம்
இதில் கடும் அதிருப்தியடைந்த தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான பெஞ்ச் மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்தது. இந்த பெஞ்ச்சில் நீதிபதிகள் ரஞ்சனா தேசாய், மதன் பி.லோக்குர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
முழுப்பட்டியலையும் தாக்கல் செய்க
மேலும் மத்திய அரசிடம் இருக்கும் முழுப் பட்டியலையும் தாக்கல் செய்தாக வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கண்டிப்பு காட்டியது. இதனால் இன்று எப்படியும் கருப்புப் பணத்தைப் பதுக்கிய திமிங்கலங்களும் முதலைகளும் அம்பலமாகிவிடுவர் என்று எதிர்பார்ப்பு நிலவியது.
627 பேர் பட்டியல்
இந்த எதிர்பார்ப்புகளுக்கு அமைய வெளிநாட்டில் கருப்புப் பணத்தைப் பதுக்கிய 627 பேர் பட்டியலை உச்சநீதிமன்றத்தில் அதிரடியாக மத்திய அரசும் தாக்கல் செய்தது.
பட்டியலை வெளியிடாதீர்- மத்திய அரசு
ஆனால் மத்திய அரசோ, இந்த பட்டியலை உடனே வெளியிட வேண்டாம். அப்படி வெளியிட்டால் விசாரணைகள் பாதிக்கும் என்று கூறியது.
நாங்களும் கவரை திறக்கவில்லை- சுப்ரீம் கோர்ட்
இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதிகளும், 627 பேர் பட்டியல் அடங்கிய சீலிட்ட கவரை நாங்கள் திறந்து பார்க்கமாட்டோம்.. உச்சநீதிமன்ற பதிவாளர் மூலமாக இன்றே சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்படும். அவர்களே அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வர் என்று அறிவித்துவிட்டனர்.
பெயர் தெரியாது
அத்துடன் இந்தப் பட்டியலை வெளியிடுவது குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழுதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதனால் கருப்புப் பண முதலைகளின் பட்டியல் வெளியாவது சிறப்பு புலனாய்வுக் குழுதான் கைகளில் இருக்கிறது.
ஜெத்மலானிக்கு கொடுக்கலாம்
அதே நேரத்தில் இந்த வழக்கின் மனுதாரராகிய ராம்ஜெத்மலானிக்கும் இந்த பட்டியலை கொடுக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உடனே தெரியாது
இதனால் அந்த 627 "கருப்பு" முதலைகள் யார் என்ற விவரம் நாட்டு மக்களுக்கு உடனே தெரியவாய்ப்பில்லாமல் போய்விட்டது. ஆனால் விரைவில் அந்த திமிங்கலங்களின் முகங்கள் அம்பலமாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.