சட்ட விரோத சுரங்கங்கள், ஆடம்பர ரிசார்ட்டுகள்.. இது கருப்புப் பண தொழிலதிபர் ராதா திம்ப்லோ!
பானாஜி: கருப்பு பண பட்டியலில் இடம்பெற்றுள்ள தொழிலதிபர்களில் ஒருவரான கோவாவை சேர்ந்த ராதா சதீஷ் திம்ப்லோ, அம்மாநிலத்தின் அதிக வரி செலுத்தும் குடிமக்களில் முக்கியமானவர். கருப்பு பண பட்டியலில் தனது பெயர் இடம் பெற்றது குறித்து ராதா அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
கருப்பு பணம் வைத்துள்ளோர் பட்டியலை மத்திய அரசு நேற்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் மூன்று தொழிலதிபர்கள் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. அதில் ஒருவர்தான் கோவா மாநில சுரங்க, பெண் தொழிலதிபரான ராதா திம்ப்லோவாகும்.
ராதாவுக்கு கோவா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளிலுமே நல்ல செல்வாக்கு உள்ளது. கோவாவின் சிடாடே டே என்ற ஆடம்பர ரெசார்ட்டும் இவருடையது.
கோவா மாநிலத்தில் ஆண்டுதோறும் அதிக வரி செலுத்துவோர் பட்டியலில் தவறாமல் இடம் பிடிப்பவர் ராதா. அப்படியிருக்கும்போது வரி ஏய்ப்பு செய்ததாக அவரது பெயர் பட்டியலில் இடம் பிடித்துள்ளது ராதாவுக்கு மட்டுமல்ல அவரது குடும்பத்தார் மற்றும் கோவா மாநில மக்களில் பெரும்பாலானோருக்குமே அதிர்ச்சியளிப்பதாக உள்ளதாம்.
இதுகுறித்து நிருபர்கள் ராதாவை தொடர்பு கொண்டு கேட்டபோது, அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தை முழுமையாக படித்து பார்த்துவிட்டு அதன்பிறகு விளக்கமாக ஒரு அறிக்கை வெளியிடுகிறேன். அதுவரை இதில் எதுவும் சொல்வதற்கில்லை என்றார்.
ராதாவின் பெயர் சர்ச்சைக்குள்ளாகுவது இது முதன்முறை கிடையாது. முன்னதாக, கோவாவில் சட்ட விரோத சுரங்கத் தொழிலில் ஈடுபடும் நிறுவனங்களில் ஒன்றாக ராதாவின் நிறுவனத்தை, 2012ல், மத்திய அதிகாரம் வழங்கப்பட்ட கமிட்டி (சிஇசி) அறிவித்திருந்தபோதும் இதேபோன்ற சர்ச்சை வெடித்தது.