ரூ.6 ஆயிரம் கோடி கருப்பு பண பரிவர்த்தனை.. டெல்லி, பேங்க் ஆப் பரோடா வங்கியில் சிபிஐ ரெய்டு
டெல்லி: மோடி அரசு மத்தியில் அமைந்த பிறகு ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு டெல்லி, பேங்க் ஆப் பரோடா வங்கி மூலம் ஹாங்காங்கிற்கு கருப்பு பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியிருந்த நிலையில், இன்று அந்த வங்கியில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஆர்.பி.என்.சிங் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "தனது ஆட்சியில் ஊழல்கள் எதுவும் நடைபெறவில்லை என்று பிரதமர் மோடி கூறி வருவது பொய். அவரது ஆட்சி அமைந்த 2 மாதங்களுக்குப் பிறகு ரூ.6,000 கோடிக்கும் கூடுதலான கருப்புப்பணம் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்காக, டெல்லியின் அசோக் விஹார் பகுதியில் அமைந்துள்ள பேங்க் ஆப் பரோடா வங்கிக் கிளையில் உள்ள 59 கணக்குகளில் ரூ.6,172 கோடி முன்கூட்டியே டெபாசிட் செய்யப்பட்டிருந்தது. அந்தத் தொகை ஹாங்காங்கில் உள்ள சில நிறுவனங்களுக்கு கடந்த ஆண்டு அனுப்பி வைக்கப்பட்டது.
இத்தொகையை அனுப்பியவர்கள் குறிப்பிட்டுள்ள முகவரியின்படி, மேற்கண்ட நிறுவனங்களில் 3 நிறுவனங்களைக் கண்டறிய இயலவில்லை. ஹாங்காங்கில் இருந்து அரிசி, முந்திரி, பருப்பு வகைகள் ஆகியவற்றை வாங்குவதற்காக இந்தத் தொகை அனுப்பி வைக்கப்பட்டதாக அவர்கள் கூறியிருந்தது வேடிக்கையாக உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கி அறிக்கையை சமர்பித்த பிறகும் இன்னும் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. இதுபோன்ற ஒரு முறைகேடு வங்கியின் உயரதிகாரிகள் அல்லது நிதி அமைச்சகத்தின் உதவியின்றி நடந்திருக்க முடியாது. டெபாசிட்டுகள், டிரான்ஸ்பர், பண எடுப்புகள் உள்ளிட்டவற்றில் ஒரு நிறுவனம் வங்கியில் செய்யும் பரிமாற்றங்களை முறைப்படி கண்காணிக்காமல் ஒரு அரசு வங்கி எப்படி இந்த அளவுக்கு பொறுப்பின்றி நடந்து கொள்ள முடியும்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று, குறிப்பிட்ட அந்த வங்கியில், சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.