கருப்பு பண பட்டியல்- பெரும் முதலை ஒருத்தரும் இல்லை! மக்களிடம் தகவல் கோரும் விசாரணை குழு!
டெல்லி: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த, வெளிநாட்டில் கருப்புப் பணத்தைப் பதுக்கியோர் பட்டியலில் பெரும் முதலைகள் ஒருத்தர்கூட இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் தகவலை அளிக்க வேண்டும் என்று கோருவதற்கு சிறப்பு விசாரணைக் குழு திட்டமிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் கடும் கண்டனத்தைத் தொடர்ந்து மத்திய அரசு, பிரான்சிடம் இருந்து பெறப்பட்ட கருப்புப் பணத்தைப் பதுக்கிய 627 பேர் பட்டியலை நேற்று தாக்கல் செய்தது. இது சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள ஹெச்.எஸ்.பி.சி.யின் கிளையில் கணக்கு வைத்திருப்போர் பற்றிய விவரங்களாகும். இந்த பட்டியலும்கூட அந்த வங்கியில் பணிபுரிந்த பிரான்சு நாட்டவர் ஒருவர் திருடியதால் கிடைத்தது.
சீலிடப்பட்ட கவரில் ஒப்படைக்கப்பட்ட பட்டியலை உச்சநீதிமன்ற நீதிபதிகள் திறந்து பார்க்காமல் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால் இந்த 627 பேரில் 300 தான் இந்தியக் குடியுரிமை கொண்டவர்கள். எஞ்சியவர்கள் வெளிநாடு வாழ் இந்தியர்கள். அவர்களை இந்திய சட்டங்களின் கீழ் விசாரணைக்குள்ளாக்க முடியாது.
அத்துடன் இந்த வங்கிக் கணக்கு அனைத்தும் 2006ஆம் ஆண்டு ஆவணமாகும். பெரும்பாலும் பழைய வங்கிக் கணக்குகள்தானாம். 1973ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வங்கிக் கணக்கு கூட இருக்கிறதாம்.
குறிப்பாக அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் ஒருத்தர்கூட இந்தப் பட்டியலில் இல்லை என்றும் கூறப்படுகிறது. அத்துடன் பெரும்பாலான வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் திருப்பி எடுக்கப்பட்டுவிட்டதாம்.
இந்த பட்டியலின் அடிப்படையில் விசாரணை நடத்தி கருப்புப் பணத்தைக் கைப்பற்றினாலும் அது சொற்ப தொகையாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் கருப்புப் பணத்தைப் பதுக்கியோர் விவரத்தை வைத்திருந்தால் அவற்றை தெரிவிக்க கோர முடிவு செய்துள்ளது சிறப்பு விசாரணைக் குழு. இது தொடர்பான மின்னஞ்சலை அது விரைவில் வெளியிடவும் இருக்கிறது.