4 நாடுகளில் கறுப்பு பணம் குவித்துள்ள 600 இந்தியர்கள்... இறுகுகிறது பிடி!
டெல்லி: 4 நாடுகளில் கறுப்பு பணம் குவித்துள்ள 600 பேர் பெயர் பட்டியல் சேகரிக்கப்பட்டுள்ளது. அதன் மீது மத்திய விசாரணை அமைப்புகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
வெளிநாட்டு வங்கிகளில் சட்டவிரோதமாக கறுப்புப் பணத்தை மறைத்து வைத்துள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, அப்பணம் மீண்டும் இந்தியா கொண்டு வர மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இது தொடர்பான வழக்குகளில் புலனாய்வு செய்யவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, அதன் முன்னாள் நீதிபதி எம்.பி. ஷா தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு தனது விசாரணையை தொடங்கி உள்ளது.
சி.இ.ஐ.பி....
இந்நிலையில், வரி ஏய்ப்பு செய்து வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் சேர்த்து வைத்துள்ள 600 தனிப்பட்ட நபர்கள், நிறுவனங்கள் பெயர் பட்டியலை மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிற மத்திய பொருளாதார புலனாய்வு அமைப்பு (சி.இ.ஐ.பி.) பெற்றுள்ளது.
முதன்முறையாக...
இதுவரை கறுப்பு பணம் குவித்துள்ளோரின் பட்டியலை மத்திய நேரடி வரிகள் வாரியம் (சி.பி.டி.டி.) தான் சேகரித்து வந்தது. தற்போது தான் முதன்முறையாக இப்பட்டியல் மத்திய பொருளாதார புலனாய்வு அமைப்பு வசம் கிடைக்கப் பெற்றுள்ளது.
வரி ஏய்ப்பு கணக்குகள்...
இந்தப்பட்டியலில் உள்ள 600 கணக்குகளும், வரி ஏய்ப்பு செய்து கறுப்பு பணத்தை மறைக்க 4 வெவ்வேறு நாடுகளின் வங்கிகளில் சேகரிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
விசாரணைக்காக...
கடந்த நிதி ஆண்டில் பெறப்பட்ட இந்த விபரங்கள் தற்போது மத்திய வருமான வரித்துறை, மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரகம், நிதி புலனாய்வு பிரிவு, வருவாய் புலனாய்வு இயக்குனரகம் ஆகிய அமைப்புகளின் விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சட்டமீறல்கள்
இந்த அமைப்புகள் தங்கள் சட்ட விதிகளின்படி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணபரிவர்த்தனை, அன்னியச்செலாவணி சட்ட மீறல்கள் பற்றி தீவிர விசாரணை நடத்தும்.