வரி ஏய்ப்போர் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ. 15 லட்சம் பரிசு... வருமானவரித்துறை அறிவிப்பு
டெல்லி: வரி ஏய்ப்போர் குறித்து நம்பகமான தகவல் அளிப்பவர்களுக்கு ரூ. 15 லட்சம் வரை பரிசு வழங்கப் படும் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. கறுப்பு பண பதுக்கலைத் தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில், இந்தியர்கள் மறைத்து வைத்துள்ள கறுப்பு பணத்தை மீட்க, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, வரி செலுத்தாமல் ஏய்ப்போருக்கு எதிராக, சட்டப்பூர்வமாக கடும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது. எனவே, அத்தகையவர்கள் குறித்து நம்பகமான தகவல் தெரிவிப்போரை ஊக்கப்படுத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான, புதிய வழிகாட்டும் குறிப்புகள் நாடு முழுவதும் உள்ள வருமானவரித் துறை அலுவலகங்களுக்கு அனுப்பப் பட்டுள்ளது.
அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
வரி செலுத்துவதில் இருந்து தப்பிப்பதற்காக பலர், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில், கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். மேலும் பலர், பலவிதமான நிதி முறைகேடுகளிலும் ஈடுபடுகின்றனர். வருமானவரி கணக்கு தாக்கல் செய்யாமல், தில்லு முல்லு செய்வோர், சேவை வரியை செலுத்தாமல் ஏமாற்றுவோர் ஆகியோரை, அடையாளம் காணும்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவர்களை பற்றிய தகவல் தெரிவிப்போரை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் தொகையில், 10 சதவீதம் பரிசாக வழங்கப்படும். அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை பரிசாக தரப்படும். ஆதாரப்பூர்வமாகவும், ஆவணங்களாகவும் தகவல் தெரிவிப்போருக்கு மட்டுமே, இந்த பரிசு வழங்கப்படும்.
இதுபோன்ற தகவல்களை தெரிவிப்போரின், பெயர், ஊர், முகவரி போன்ற விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். தெளிவில்லாத, உறுதியற்ற தகவல்கள் கூறப்பட்டால், அவை ஏற்கப்படாது.
வரி ஏய்ப்பில் ஈடுபடுவோர் மீது, சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன், அவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். குறிப்பாக, வரி ஏய்ப்பு செய்தோரின்,பெயர், முகவரி பற்றிய விவரங்கள் பத்திரிகைகளில் வெளியிடப்படும்.
இதுவரை, 50 பேரின் பெயர்கள் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டு உள்ளன. இவர்களிடம் இருந்து, 2,000 கோடி ரூபாய் வரி வசூலாக வேண்டியுள்ளது' என இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.