வெளிநாட்டில் கருப்பு பணம் பதுக்கியோர் பெயர் விரைவில் வெளியீடு- மோடி
டெல்லி: வெளிநாட்டில் கருப்புப் பணத்தைப் பதுக்கியவர் பெயர்களை விரைவில் வெளியிடப் போவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தமது இல்லத்தில் அமைச்சர்களுக்கு விருந்தளித்தார். அப்போது அமைச்சர்களிடம் பேசிய பிரதமர் மோடி, வெளிநாட்டில் கருப்புப் பணத்தை பதுக்கியவர்கள் சிலரது பெயரை வெளியிடலாம் என்றார்.
லோக்சபா தேர்தலின் போது பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவோம் என்று உறுதியளித்திருந்தது. இதில் முட்டுக்கட்டை நீடித்து வருவதால் எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாக மோடி அரசை விமர்சித்து வருகின்றன.
கடந்த வாரம் கூட நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, இந்த விஷயத்தில் பாஜக இரட்டை நிலைப்பாட்டை மேற்கொள்ளவில்லை என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில்தான் கருப்புப் பணத்தை பதுக்கியோர் பெயரை வெளியிடலாம் என்று பிரதமர் மோடி தமது அமைச்சரவை சகாக்களிடம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் இந்த பெயர்கள் வெளியாகும்போது காங்கிரஸ் பெரும் தர்மசங்கடத்துக்கு ஆளாகும் என்று அமைச்சர் அருண் ஜேட்லியும் கூறியுள்ளார்.
ஆமா எப்பதான் பட்டியல் வரும் சார்?