மான் வேட்டை வழக்கு: சல்மான் கான் விடுதலை- ராஜஸ்தான் ஹைகோர்ட் உத்தரவு
ஜோத்பூர்: அரிய வகை மானை வேட்டையாடிய வழக்கில் சல்மான் கானுக்கு கீழ் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தண்டனையை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் ரத்து செய்து, அவரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கடந்த 1998ம் ஆண்டு ‘ஹம் சாத் சாத் ஹெய்ன்' என்ற படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகர்கள் சல்மான் கான், சயீப் அலிகான், தபு, நீலம், சோனாலி பிந்த்ரே ஆகியோர் அரிய வகை மானை வேட்டையாடியதாக குற்றம் சாட்டப்பட்டது.
சல்மான் கான் துப்பாக்கி யால் சுட்டதில் அரிய வகை மான் இனமான சின்காராஸ் மற்றும் பிளாக்பக்ஸ் என்ற வகைளைச் சேர்ந்த 3 அரிய மான்கள் கொல்லப்பட்டன. இந்த மான் வன விலங்கு பாதுகாப்பு சட்டப்படி வேட்டையாட தடை செய்யப்பட்ட விலங்காகும்.
இதையடுத்து சல்மான் கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜோத்பூர் நீதிமன்றம் கடந்த 2006ம் ஆண்டு சல்மானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
தண்டனை நிறுத்தி வைப்பு
இந்த வழக்கில் நடிகர் சல்மான் கான் 1998 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டார். இதனை எதிர்த்து அவர் ஜெய்ப்பூர் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். தனது அப்பீல் மனுவில் கீழ் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கை கடந்த 2013ம் ஆண்டு உயர்நீதிமன்றம் விசாரித்து சல்மான்கானுக்கு கீழ் கோர்ட் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
அரசு அப்பீல்
சல்மானுக்கு வழங்கப்பட்ட தண்டனையை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்ததை எதிர்த்து ராஜஸ்தான் மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. சிறை தண்டனையை சில நாட்கள் கூட அனுபவிக்காமலேயே ஜாமீனில் இருந்து வரும் சல்மான்கானுக்கு கீழ் கோர்ட் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைத்தது சரியல்ல என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சுப்ரீம் கோர்ட் விசாரணை
இந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கில் நீதிபதிகள் எஸ் ஜே முகோபாத்யாயா, ஏ கே கோயல் ஆகியோர் சல்மான்கானுக்கு கீழ் கோர்ட் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைத்து ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செல்லாது என தெரிவித்தனர். தண்டனைக்கு தடைகோரி சல்மான் கான் தாக்கல் செய்த மனுவை ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் புதிதாக விசாரிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
மான் வேட்டை வழக்கில் விடுதலை
இந்த வழக்கை விசாரித்த ராஜஸ்தான் உயர்நீதிமன்றம், கீழ் நீதிமன்றத்தின் தண்டனையை ரத்து செய்வதாக தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம், மான் வேட்டையாடியதாகத் தொடரப்பட்ட 2 வழக்குகளில் இருந்தும் சல்மான் கான் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
|
டுவிட்டரில் டிரெண்ட்
சல்மான் கான் குற்றமற்றவர் என்றும் அவர் விடுதலை செய்யப்பட்டதாக தீர்ப்பளிக்கப்பட்டதை அடுத்து டுவிட்டரில் பலவித கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றனர் சல்மான் கான் பெயர் டுவிட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளது. ராம் கோபால் வர்மாவும் டுவிட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
கார் மோதிய வழக்கில் விடுதலை
கடந்த 2002ம் ஆண்டு மும்பை யின் பாந்தரா பகுதியில், டயோட்டா லேண்ட் க்ரூசர் கார் தாறுமாறாக ஓட்டிச் செல்லப்பட்டதில், நடை பாதையில் தூங்கிக் கொண்டிருந்த ஒருவர் பலியானார். இவ்வழக்கில் கடந்தாண்டு மே மாதம் விசாரணை நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நடிகர் சல்மான் கானை, மும்பை உயர்நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் விடுவித்தது. இதை எதிர்த்து மகாராஷ்டிரா அரசு சார்பில் உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.