வெளிநாட்டில் அக்கவுண்ட் வைத்திருப்போர் பெயரையெல்லாம் வெளியிட முடியாது: மத்திய அரசு
டெல்லி: கருப்பு பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் வைத்திருக்கும் இந்தியர்கள் பெயர்களை வெளியிடுவதில் தயக்கம் இல்லை என்றபோதிலும், ஆதாரமில்லாமல் அனைவர் பெயர்களையும் வெளியிட முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கருப்பு பணம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கில் இன்று மத்திய அரசு சார்பில், பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
சீல் வைக்கப்பட்ட அந்த பிரமாணப்பத்திரத்தில் டாபர் குரூப்பின் பிரதீப் பர்மன், கோவா சுரங்க தொழிலதிபர் ராதா எஸ். திம்ப்லோ மற்றும் தங்கம், வெள்ளி வியாபாரி பங்கஜ் சிமன்லால் லோத்யா ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்த பிறகு உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு கூறியதாவது: வெளிநாடுகளிலுள்ள வங்கிகளில் கருப்பு பணம் வைத்துள்ள இந்தியர்களின் பெயர்களை வெளியிடாமல் மறைத்து வைக்க மத்திய அரசுக்கு எந்த நோக்கமும் கிடையாது.
JUST IN: #BlackMoney #SC pic.twitter.com/jZmJGqAZAD
— Doordarshan News (@DDNewsLive) October 27, 2014
வரி ஏய்ப்பு செய்து வெளிநாட்டு வங்கிகளில் குவிக்கப்பட்டுள்ள பணம் குறித்த தகவல் அனைத்தும், வெளியிடப்படும். வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் எல்லோரும் கருப்பு பணம் வைத்திருப்போர் என்று அர்த்தம் கிடையாது.
வெளிநாட்டு வங்கிகளில் உள்ள பணம் முறையாக சம்பாதிக்கப்பட்டதா, அல்லது, வரி ஏய்ப்பு செய்யப்பட்ட பணமா என்பது குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து, அடிப்படை ஆதாரம் இருந்தால் மட்டும் அவர்கள் பெயரை வெளியிடும். இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.