அட பொறுங்கப்பா... அதுக்குள்ள அவசரப்பட்டா எப்படி?: கிரண்பேடி
டெல்லி: டெல்லி தேர்தல் முடிவுகளை நாடுமுழுவதும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே ஆம் ஆத்மி கட்சியின் பக்கம் தராசு முள் சாய ஆரம்பித்து விட்டது. ஆம் ஆத்மியின் லீடிங் இரட்டை இலக்கத்திற்கு செல்ல பாஜக பரிதாப நிலையிலேயே இருந்தது.
தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக்கணிப்புகளைப் போலவே முன்னணி நிலவரங்களும் வரத் தொடங்கின. நிலவரங்கள் வரவர பாஜக முதல்வர் வேட்பாளர் கிரண்பேடியை மீடியாக்கள் மொய்க்கத் தொடங்கின.
தனது வீட்டின் பால்கனியில் இருந்து பதிலளித்த கிரண்பேடி, "பொறுங்கள்... பொறுங்கள்... முன்னணி நிலவரம்தான் இது முடிவு இல்லை... அதற்கு இன்னும் ரொம்ப தூரம் போகவேண்டும்" என்று கூறினார்
மேட்சில் விளையாட ஆரம்பித்திருக்கிறோம் முடிவுக்காக காத்திருங்கள் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று கூறினார்.
இப்படித்தானே தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக்கணிப்புகள் வந்த போதும் சொன்னீங்க பேடி ஜி...
70 தொகுதிகளைக் கொண்ட சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெற்றது. இன்று காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் முடிவுகள் ஆம் ஆத்மி கட்சிக்கு சாதகமாகவே வரத் தொடங்கியுள்ளதால் பாஜக தலைவர்கள் பதற்றத்தில் உள்ளனர்.