கொல்கத்தா ஓடும் மின்சார ரயிலில் கையெறிகுண்டு வீச்சு- 17 பேர் படுகாயம்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் ஓடும் ரயில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் கையெறி குண்டு வீசியதில் 17 பேர் படுகாயமடைந்துள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவில் சியால்டா-கிருஷ்ணாநகர் மின்சார ரயிலில் இன்று அதிகாலை 3.50 மணிக்கு ஓடும் ரயிலில் இருதரப்பிற்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டவர்கள் ஒருவர் மீது ஒருவர் கையெறி குண்டை வீசினர் என்றும் கூறப்படுகிறது. இதில் 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆர்.ஜி. கார் மெடிக்கல் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குண்டுவெடிப்பை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். குண்டு வெடிப்பு சம்பவத்தால் அந்த மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.