பாதங்கள் கொப்பளித்து வெடித்து....ரத்தம் சொட்ட சொட்ட நடந்து வந்த மகாராஷ்டிரா விவசாயிகள்!
நாட்டுக்கே சோறு போடும் விவசாயி தனக்கான கோரிக்கைகளுக்காக 180 கிலோமீட்டர் தூரம் வெறுங்கால்களுடன் ரத்தம் வடிய நடந்து வந்த வேதனைக் காட்சிகள் நம் நாட்டில் விவசாயியின் நிலை எப்படி இருக்கிறது என்பதை தோலுரித
Recommended Video
மும்பை : நாட்டுக்கே சோறு போடும் விவசாயி தனக்கான கோரிக்கைகளுக்காக 180 கிலோமீட்டர் தூரம் வெறுங்கால்களுடன் ரத்தம் வடிய நடந்து வந்த வேதனைக் காட்சிகள் நம் நாட்டில் விவசாயியின் நிலை எப்படி இருக்கிறது என்பதை தோலுரித்து காட்டுகிறது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் பேரணி சென்ற விவசாயிகளின் அவல நிலையை விளக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் பாதிய கிசான் சபா என்ற விவசாயிகள் அமைப்பு நாசிக் முதல் மும்பை வரை பிரம்மாண்ட பேரணியை நடத்தியது. சுமார் 30 ஆயிரம் விவசாயிகள் கையில் சிவப்பு கொடியேந்தி நடத்திய இந்தப் பேரணி சாலையில் செங்கடல் திரண்டு ஓடுவதைப் போன்று காட்சியளித்தது.
விவசாய நெருக்கடியாலும், இயற்கையால் ஏற்பட்ட அழிவினாலும் போராடிவரும் மஹாராஷ்டிரா விவசாயிகள், தங்களது கோரிக்கைகளாக கடந்த 2017 ஆம் ஆண்டில் முதல்வர் பத்னாவிஸ் அறிவித்தது போலவே விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பேரணி நடத்தினர். இதனுடன் சுவாமிநாதன் கமிஷனையும் செயல்படுத்த வேண்டும் என்பதும் இவர்களின் கோரிக்கை.
இந்தப் பேரணியில் பெண்கள், வயதானவர்கள் அதிலும் குறிப்பாக பழங்குடியின மக்கள் அதிக அளவில் பங்கேற்றனர். நாசிக் பகுதியில் மலைவாழ் மக்கள் வேளாண்மை செய்தாலும் நிலத்தின் உரிமையானது வனத்துறையிடமே உள்ளது. வனத்துறையினர் எப்போது வேண்டுமானலும் பயிர்களை அழித்து விடுகின்றனர் என்பதால் பழங்குடியின மக்களுக்கு விவசாய நிலங்களுக்கான உரிமையை வழங்க வேண்டும் என்பதும் இவர்களின் பிரதான கோரிக்கை.
|
கால்கள் சொல்லும் வலிகள்
சுதந்திரம் அடைவதற்கு முன்னர் மக்கள் எப்படி அணியணியாக திரண்டு நடைபாதையாக சென்று போராடினார்களோஅது போல இருந்தது இந்த விவசாயிகள் பேரணியும். வெறும் கால்களுடனும், தேய்ந்த காலணிகளுடனும் ரத்தம் சொட்ட சொட்ட சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் பேரணியில் பங்கேற்றனர்.
|
விவசாயியின் வாழ்க்கை இது தான்
சிறு காயம் என்றாலே துடித்துப் போகும் நமக்கு இந்த சிவந்த கால்களும், கொப்பளித்து வெடித்த பாதங்களும் அவர்களின் வலி என்ன என்பதை இந்த உலகிற்கே சொல்லும் ஒற்றை வரி செய்தி என்னவென்றால் நாட்டுக்கே சோறு போட்டாலும் எங்களின் வாழ்க்கை இவ்வளவு தான் என்பதாகவே இருக்கிறது.
விவசாயிகளின் 180 கி.மீ பயணம்
பத்திரிக்கைகளிலும், சமூக வலைதளங்களிலும் இந்த விவசாயிகளின் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. 10 கி.மீ, 50 கி. மீட்டர் அல்ல சுமார் 180 கிலோ மீட்டர் நடைபயணமாகவே வந்துள்ளனர் விவசாயிகள். மும்பையை கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்கள் அடைந்த நிலையில் சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருந்தனர்.
கோரிக்கைகள் ஏற்பு
ஆனால் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்பதாக அரசு அறிவித்த நிலையில் பேரணி முடிவுக்கு வந்துள்ளது. இதனையடுத்து 2 சிறப்பு ரயில்கள் மூலம் விவசாயிகள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.