பலமுறை உல்லாசம்... பார்வையற்ற ஆணின் குரலை வைத்து நீதிமன்றத்தில் அடையாளம் காட்டிய பார்வையற்ற பெண்
ஆசை வார்த்தைகூறி பார்வையற்ற பெண்ணை ஏமாற்றிய பார்வையற்ற ஆணின் குரலை வைத்து நீதிமன்றத்தில் அடையாளம் காட்டினார்.
புதுடெல்லி: கணவரின் தற்கொலை குறித்து விசாரிக்க உதவி கோரிய பார்வையற்ற பெண்ணை ஏமாற்றிய பார்வையற்ற நபரின் குரலை வைத்து நீதிமன்றத்தில் அடையாளம் காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
டெல்லியில் வசித்து வரும் பார்வையற்ற பெண்ணின் கணவர் கடந்த 2014-ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு 6 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் அவரது கணவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அப்பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
சட்டரீதியில்...
இவ்விவகாரத்தை சட்டரீதியாக அணுகுவதற்காக இலவசமாக சட்ட ஆலோசனை அளிக்கக்கூடிய வழக்கறிஞர் ஒருவரை அவர் தேடினார். அப்போது அந்த பெண்ணுடைய நண்பர் ஒருவரின் மூலம் பொதுத் துறை வங்கி ஒன்றில் பயிற்சி அதிகாரியாக உள்ள சவுரப் கபூர் (33) என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவரும் பார்வையற்றவர் என்பதால் அந்த பெண்ணுக்கு நம்பிக்கை ஏற்பட்டது.
சட்ட நிபுணர்களிடம்...
டெல்லியில் உள்ள மயூர் விஹார் பகுதியில் வசித்துவரும் சவுரப், தனக்கு சட்ட நிபுணர்கள் பலரை தெரியும் என்றும், ஒரு வழக்கறிஞரை அறிமுகப்படுத்தி வைப்பதாகவும் கூறி கடந்த 30-5-2015 அன்று அவரை குர்கான் நகருக்கு அழைத்து சென்றார். ஆனால், வழக்கறிஞரிடம் அழைத்து செல்லாமல் குர்கான் நகரில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு அழைத்து சென்று தங்கவைத்து, அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி, உல்லாசமாக இருந்துள்ளார்.
5 மாதங்கள் தொடர்ந்து...
டெல்லிக்கு திரும்பிய பின்னரும், தொடர்ந்து 5 மாதங்கள் வரை மீண்டும் மீண்டும் அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்த சவுரப், அவரிடம் இருந்து பல தடவை பணமும் வாங்கியுள்ளார். அதற்கு பின்னர் அந்த பெண்ணுடன் பழகுவதையே சவுரப் நிறுத்திக் கொண்டார். இதனால் சவுரப் மீது நடவடிக்கை எடுப்பதற்காக பார்வையற்றோருக்கு உதவும் ஒரு தொண்டு நிறுவனத்தை அந்த பெண் அணுகினார்.
எஃப்ஐஆர் பதிவு
அங்குள்ள பாத்திமா கபிர் என்பவர் உதவியால் டெல்லி மியான்வாலி போலீஸ் நிலையத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சவுரப் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. டிசம்பர் மாதம் அவரை கைது செய்த போலீஸார், அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பாதிக்கப்பட்டவர் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர் இருவருமே பார்வையற்றவர்களாக இருப்பதால் இந்த வழக்கில் தேவையான சாட்சி மற்றும் ஆதாரங்களை நிரூபிக்க அரசு தரப்பு வழக்கறிஞர் மிகவும் சிரமப்பட வேண்டி இருந்தது.
ஆதாரங்கள்
சவுரப்புக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் இடையில் நடைபெற்றுவந்த கைபேசி அழைப்பு விபரங்கள், மருத்துவ பரிசோதனை மற்றும் தடயவியல் துறை அறிக்கைகள், அவர்கள் குர்கானில் தங்கி இருந்த விடுதியின் பதிவேடுகள் ஆகியவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. எனினும், அந்தப் பெண்ணை ஏமாற்றியது சவுரப் தான் என்பதை நிரூபிக்கும் வகையில் அவரது குரலை வைத்து அடையாளம் காட்ட அனுமதி வழங்குமாறு அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிபதியிடன் அனுமதி பெற்றார்.
வழக்கு 24-க்கு ஒத்திவைப்பு
அதன் பின்னர், பார்வையற்ற சவுரப் நீதிமன்றத்தில் பேசிய குரலை கேட்டு, தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைகாட்டி, மோசம் செய்தவர் இவர்தான் என பார்வையிழந்த அந்தப் பெண் அடையாளம் காட்டினார். இதையடுத்து, இவ்வழக்கில் சவுரப் கபூரை குற்றவாளி என தீர்மானித்த நீதிபதி, அவருக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனை தொடர்பான வாதப் பிரதிவாதத்தை வரும் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.