ஷாருக்கான் பங்களா முன் அனுமதியின்றி அமைக்கப்பட்ட சரிவுப்பதை இடிப்பு!!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் பங்களா முன்பாக அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த சரிவுப்பாதையை அதிகாரிகள் இன்று இடித்து அகற்றினர்.
ஷாருக்கானின் பங்களா மும்பை பந்த்ரா பகுதியில் உள்ளது. தனது பிறந்த நாள் மற்றும் மும்பையில் இருக்கும் போது தன்னை சந்திக்க வரும் ரசிகர்களை இந்த மேடை போல் இருக்கும் இந்த சரிவு பாதையில் இருந்தவாறு தான் அவர் சந்திப்பது வழக்கம்.
ஷாருக்கான் சூட்டிங் செல்லாத சமயத்தில் அவருடைய கேரவன் வேன் இந்த இடத்தில்தான் நிறுத்தப்படும். அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த இந்த மேடையால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. பூனம் மகாஜன் இந்த சரிவுப்பாதையை இடிக்ககோரி மும்பை மாநகராட்சிக்கு கடிதம் எழுதினார். இதைத் தொடர்ந்து ஷாருக்கானுக்கு மும்பை மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். ஆனால் அந்த சரிவுப்பாதையை ஷாருக்கான் அகற்றாததால் இன்று மும்பை மாநாகராட்சி அதிகாரிகள் அதை இடித்து தள்ளினர்.