பாட்னாவில் கங்கை நதியில் படகு கவிழ்ந்து விபத்து - உயிரிழப்பு 21ஆக உயர்வு
பாட்னாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது. மாயமான மேலும 40 பேரை தேடும்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பாட்னா: பீகார் மாநிலம் பாட்னா கங்கை நதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 40 பேர் ஆற்றில் மூழ்கி மாயமாகியுள்ளனர்.
பீகார் தலைநகர் பாட்னாவில் மகர சங்கராந்தியை கொண்டாடிவிட்டு 40க்கும் மேற்பட்டோர் படகில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மாயமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பீகார் மாநிலத்தில் மகர சங்கராந்தி விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்த விபத்து மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநில அரசின் சுற்றுலா துறை சார்பில் மகர் சங்கிராந்தி பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருவிழாவிற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டது.
தற்போது 3 தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.