70 கி.மீ தூரத்திற்கு சடலத்தை இழுத்துச் சென்ற பெங்களூர் பஸ்.. டிரைவர் என்ன சொல்கிறார் தெரியுமா?
Recommended Video
பெங்களூர்: சடலத்தை கீழே போட்டு இழுத்தபடி சுமார் 70 கி.மீ தூரம் பஸ் ஓட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கர்நாடக அரசு போக்குவரத்து கழக பஸ் டிரைவர் முதல் முறையாக மீடியாக்களிடம் நடந்த சம்பவம் குறித்து வாய் திறந்து பேசியுள்ளார்.
உதகை மாவட்டம் குன்னூரில் இருந்து, பெங்களூருக்கு சென்ற கர்நாடக அரசு வோல்வோ பஸ்சின் அடியில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராம்நகரம் மாவட்டம் சென்னபட்டணா அருகே திடீரென ஒரு சத்தம் கேட்டதாகவும், அப்போதுதான் அந்த ஆண் உடல் பஸ்சுக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன. அந்த பகுதியில் இருந்து பெங்களூர், சாந்திநகர் பகுதியிலுள்ள கேஎஸ்ஆர்டிசி டெப்போ வரையிலும் சுமார் 70 கி.மீ தூரத்திற்கு அந்த சடலம் இழுத்து செல்லப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது.
ஜாமீனில் விடுதலை
இதனிடையே பஸ் டிரைவர் மொய்னுதீன் வில்சன்கார்டன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். தனது சொந்த ஊரான ரெய்ச்சூர் சென்ற அவர், ஊடகம் ஒன்றிடம் நடந்த சம்பவங்களை பற்றி கூறியுள்ளார். சென்னபட்டணா அருகே சாலையில் ஒரு சடலம் கிடந்ததை கடைசி சில நொடிகளில் இடைவெளியில் பார்த்தேன். உடனடியாக வேறு பக்கம் பஸ்சை திருப்பினேன். ஆனால் அப்போது வண்டியில், சத்தம் எதுவும் கேட்கவில்லை.
மறைத்த டிரைவர்
சாந்திநகர் வந்து சேர்ந்த பிறகு டயர் காற்று நிலவரத்தை செக் செய்ய குனிந்து பார்த்தபோதுதான், பஸ்சுக்கு அடியில் சடலம் கிடந்ததை பார்த்தேன். உடலின் கீழ் பகுதி தொங்கியபடி இருந்தது. நான் அதை உருவி எடுத்து பின்பக்கம் கொண்டு சென்று போட்டேன். இதன்பிறகு சடலத்தை பார்த்து சிலர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விசாரித்தபோது, நான் உண்மையை சொல்லிவிட்டேன் என்றார்.
அரசு பஸ் விதிமுறை
கேஎஸ்ஆர்டிசி விதிமுறைப்படி, விபத்து நடைபெற்றால் உடனே டிரைவர்கள் அருகேயுள்ள காவல் நிலையத்திற்கும் அருகேயுள்ள டெப்போவிற்கும் தகவல் கொடுக்க வேண்டும். பெரிய அளவிலான விபத்து என்றால் பஸ் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் போய்விடும். எனவே பயணிகளை அங்கேயிருந்து வேறு பஸ்சுக்கு மாற்றி அனுப்ப வேண்டும். ஆனால் இதில் எதையும் மொய்னுதீன் செய்யவில்லை.
பயத்தால் மறைத்ததாக வாக்குமூலம்
அச்சம் காரணமாக சடலத்தை மறைத்துவிட முயன்றதாகவும், ஆனால், போலீசாரிடம் உண்மையை கூறிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், 70 கி.மீ தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டதை போல சடலம் தென்படவில்லை என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே பிரேத பரிசோதனை முடிவில்தான் அதுகுறித்து தெரியவரும் என்கிறார்கள் போலீசார். சம்பவம் நடந்தபோது, நடத்துநர் பஸ்சுக்குள் தூங்கிக்கொண்டிருந்தார் என்பதால் அவர் விசாரணை வளையத்திற்குள் வரவில்லை.