உ.பியில் காணாமல் போன சிறுமி... முதல்வர் அகிலேஷ் வீட்டின் அருகில் பிணமாக கண்டெடுப்பு
லக்னோ: உத்திர பிரதேசத்தில் காணாமல் போன 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் முதல்வர் அகிலேஷ் யாதவின் வீட்டின் அருகே பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோ நகரில் உள்ள ஜானகிபுரம் பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி கடந்த 10 ஆம் தேதி திடீரென மாயமானார்.
இதுதொடர்பாக, அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர். இந்நிலையில், காணாமல்போன மாணவியின் பிரேதத்தை கவுதம்பள்ளி பகுதியில் மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் வீட்டின் அருகே போலீசார் இன்று மீட்டுள்ளனர்.
விசாரணையின் முதல்கட்ட தகவலின்படி அந்த இளம்பெண்ணை சிலர் பலாத்காரம் செய்து கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார், பிரேதத்தை கைப்பற்றி பிரதேப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.