போபர்ஸ் பீரங்கி ஊழல்.. நீதிமன்றங்களுக்கு பதிலாக விசாரணை நடத்திய ஊடகங்கள்: பிரணாப் முகர்ஜி சாடல்
டெல்லி: 1980களில் ராணுவத்துக்கு போபர்ஸ் பீரங்கிகள் வாங்கியதில் ஊழல் நடந்ததாக கூறி ஊடகங்களே விசாரணை நடத்தினவே தவிர எந்த நீதிமன்றமும் இது பற்றி தீர்ப்பு வழங்கவில்லை என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவை உலுக்கிய மிகப் பெரிய ஊழல்களில் ஒன்று போபர்ஸ் ஆயுத பேர ஊழல். 1986ஆம் ஆண்டு ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த போது சுவீடன் நாட்டின் போபர்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ. 1500 கோடிக்கு பீரங்கிகளை வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது.
இதில் பெருமளவில் ராஜிவ் காந்தி குடும்பத்துக்கு லஞ்சம் கை மாறியதாக சர்ச்சை எழுந்தது. இதனால் 1989ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியைத் தழுவியது.
அப்போது தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிதான் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். இந்த நிலையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அரசு முறை பயணமாக சுவீடன் செல்கிறார்.
இதையொட்டி அவர் சுவீடன் செய்தி பத்திரிகை ஒன்று அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:
போபர்ஸ் ஆயுத பேர ஊழல் நடைபெற்றதாக கூறி ஊடகங்கள்தான் விசாரணை நடத்தின. ஆனால் இந்தியாவில் எந்த நீதிமன்றத்திலும் அது நிரூபிக்கப்படவில்லை.
இது குறித்து எந்த நீதிமன்றத்திலும் தீர்ப்பும் கொடுக்கப்படவில்லை. சட்டப்படியான தீர்ப்பு எதுவும் இல்லாமல் இதை ஊழல் என கூறமுடியாது.