வயலில் வெடித்த வெடிகுண்டால் 13 பெண்கள் படுகாயம் - கேரளாவில்!
திருவனந்தபுரம்: கேரளாவில் வயல் ஒன்றில் திடீரென்று குண்டு வெடித்ததில் 13 பெண்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவனந்தபுரம் அருகே உள்ள பாலோடை அடுத்த நந்தியோடு பகுதியில் வயல்வெளி உள்ளது. தற்போது இந்த வயலில் "களை" எடுக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் தினமும் ஏராளமான பெண் தொழிலாளர்கள் இங்கு வந்து களை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று காலை வழக்கம்போல ஏராளமான பெண்கள் வயலில் வேலை செய்துகொண்டு இருந்தனர்.
அப்போது திடீரென்று வயலின் ஒரு பகுதியில் இருந்து பயங்கரமாக குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. இதைதொடர்ந்து பெண்களின் கூச்சலும் எழுந்தது. அந்த பகுதியில் புகை மண்டலமும் ஏற்பட்டது. இதை பார்த்ததும் வயலில் வேலைபார்த்துக் கொண்டிருந்தவர்கள் அங்கு ஓடிச்சென்று பார்த்தனர். அப்போது சில பெண்கள் படுகாயத்துடன் வயலில் விழுந்து கிடந்தனர்.
இதைதொடர்ந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு படுகாயம் அடைந்த பெண்கள் நெய்யாற்றின்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஜெயபிரபா, லலிதா, ராதா, லில்லி, ரீனா, பிந்து, ராஜி உள்பட மொத்தம் 13 பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த குண்டு வெடிப்பு பற்றி பஞ்சாயத்து தலைவர் அஜீத் நெய்யாற்றின்கரை போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசாரும் வெடிகுண்டு நிபுணர்களும் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது வயல் வெளியில் வெடித்தது நாட்டு வெடிகுண்டுகள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் இருந்து வெடிக்காத 6 நாட்டு வெடிகுண்டுகளையும் வெடிகுண்டு நிபுணர்கள் கைபற்றி அதை செயல் இழக்க செய்தனர்.
இந்த நாட்டு வெடிகுண்டுகளை வயல்வெளியில் பதுக்கி வைத்தவர்கள் யார்? எதற்காக அந்த குண்டுகள் அங்கு வைக்கப்பட்டிருந்தது என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.