வெடிகுண்டு புரளியால் பாராளுமன்ற வளாகத்தில் திடீர் பரபரப்பு !
டெல்லி: பாராளுமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று மாலை தொலைபேசியில் தகவல் வந்தது. இதனால் பதட்டமான சூழல் உருவாகியது. இதையடுத்து வெடிகுண்டு செயலிழப்பு படையினர் விரைந்தனர்.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் முடிவுக்கு வந்துள்ளது என்றும் தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பெரும் பதட்டத்தை ஏற்படுத்திய இந்த தாக்குதலின் கோரம் மறைவதற்குள் டெல்லியில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்க தீவிரவாதிகள் 2 பேர் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளன.
இதை அடுத்து டெல்லியில் பாதுகாப்பு ஏற்படுக்ள் பலப்படுத்தப்பட்டுள்ளன. வருகிற 26 ஆம் தேதி குடியரசு தின கொண்டாடப்பட உள்ள நிலையில் தீவிரவாதிகளால் அசம்பாவிச சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பில் கவனமாக இருக்கும்படி மத்திய அரசு பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று மாலை தொலைபேசியில் தகவல் வந்தது. இதனால் பதட்டமான சூழல் உருவானது. இதையடுத்து உடனடியாக பாராளுமன்றத்துக்கு வெடிகுண்டு செயலிழப்பு படையினர், போலீஸ் படையினர் விரைந்தனர். தீயணைப்பு வண்டிகளும் விரைந்து வந்தன.
இந்த குழுவினர் பாராளுமன்ற வளாகம் முழுவதையும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தி, வெடிகுண்டு ஏதேனும் வைக்கப்பட்டுள்ளதா? என சல்லடை போட்டு தேடினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. எனவே, தொலைபேசி தகவல் புரளிதான் என தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், தொலைபேசி மூலம் புரளி கிளப்பிய நபர், ஜோதி நகரைச் சேர்ந்தவர் என தெரியவந்தது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாட்ஸ் அப், செல்போன் மூலம் போலீஸ் வெடிகுண்டு வைத்திருப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்மநபர்கள் அவ்வப்போது மிரட்டல் விடுக்கும் சம்பவம் தொடர் கதையாகவே உள்ளது. எனவே இதை தடுக்கும் வகையில் போலீசார் நடவடிக்கை எடுத்தால் தேவையில்லா புரளியில் இருந்து விடுபடலாம்.