அஸ்ஸாம் முதல்வர் மீதான கொலை முயற்சி வழக்கை வாபஸ் பெறும் மிசோரம்- பொருளாதார தடையால் பதற்றம் நீடிப்பு
குவஹாத்தி: அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா மீதான கொலை முயற்சி வழக்கை திரும்பப் பெற மிசோரம் மாநில அரசு முடிவு செய்துள்ளது. மிசோரம் மீது அஸ்ஸாம் மக்கள் பொருளாதார தடை விதித்துள்ளதை அம்மாநில முதல்வர் சோரம்தங்கா கடுமையாக எதிர்த்துள்ளார்.
அஸ்ஸாம் மாநிலத்துக்கும் மிசோரம், நாகாலாந்து, மேகாலயா, அருணாசல பிரதேசம் மாநிலங்களுக்கும் இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சனைகள் இருந்து வருகின்றன. இந்த எல்லை பிரச்சனைகளின் உச்சமாக கடந்த ஜூலை 26-ந் தேதி அஸ்ஸாம், மிசோரம் மாநிலங்களின் போலீசாருக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது.
மிசோரம் எல்லைக்குள் நுழைந்து அஸ்ஸாம் போலீசார் குடில்களை அமைக்க முயன்ற போது இந்த துப்பஅக்கிச் சூடு மோதல் நடைபெற்றது. இதில் அஸ்ஸாம் போலீசார் 5 பேர் மரணம் அடைந்தனர். எஸ்.பி. உள்ளிட்ட 40 போலீஸ் அதிகாரிகள் படுகாயமடைந்தனர். இதனால் இரு மாநிலங்களிடையே பெரும் பதற்றம் தொடருகிறது.
அஸ்ஸாம் முதல்வர் மீது வழக்கு
இந்நிலையில் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா உள்ளிட்ட 4 காவல்துறை அதிகாரிகள் மீது மிசோரம் போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தனர். மிசோரம் ஐஜி Neihlaia வை அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தூண்டுதலில் கொலை செய்ய முயன்றதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே முதல் தகவல் அறிக்கையில் இருந்து ஹிமந்த பிஸ்வா சர்மா பெயரை நீக்க மிசோரம் அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மிசோரம் மாநில தலைமை செயலாளர் Lalnunmawia Chuaungo கூறுகையில், முதல் தகவல் அறிக்கையில் ஹிமந்த பிஸ்வா சர்மா பெயர் இடம் பெற்றிருப்பது முதல்வர் சோரம்தங்காவுக்கும் தெரியாது; எனக்கும் தெரியாது. ஊடகங்களில் இந்த செய்தி வெளியானதையடுத்து முதல் தகவல் அறிக்கையில் இருந்து ஹிமந்த பெயரை நீக்க உத்தரவிட்டுள்ளார் முதல்வர் சோரம்தங்கா என்றார்.
மோதலுக்கு என்ன காரணம்?
இந்த நிலையில் மிசோரம் செல்லும் நெடுஞ்சாலைகளை அஸ்ஸாம் மக்கள் மறித்து பொருளாதாரத் தடை விதித்துள்ளனர். இதற்கு மிசோரம் முதல்வர் சோரம்தங்கா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சோரம்தங்கா கூறியதாவது: எல்லை பிரச்சனைக்கு அர்த்தமற்ற காரணங்களை அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறி வருகிறார். எல்லை மோதலின் பின்னணியில் போதைப் பொருள் கடத்தும் கும்பல் இருக்கிறது; அஸ்ஸாமின் பசு பாதுகாப்பு சட்டத்தின் மீதான கோபமும் காரணம் என்பதெல்லாம் சாக்கு போக்குகள்தான்.
அஸ்ஸாம் அத்துமீறல்
அஸ்ஸாம் என்ன பெர்லினா? பொருளாதார தடை விதிக்க அவர்கள் யார்? இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு பொருளாதாரத் தடையை நீக்க வேண்டும். ஜூலை 24-ந் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் அனைத்து வடகிழக்கு மாநில முதல்வர்களும் சந்தித்து ஆலோசனை நடத்தினோம். அப்போது அனைத்து எல்லை பிரச்சனைகளுக்கும் சுமூகமாக தீர்வு காண்கிறோம் என தெரிவித்திருந்தோம். ஆனால் ஜூலை 26-ந் தேதி அஸ்ஸாம் போலீசார்தான் அத்துமீறி எல்லை தாண்டி வந்தனர்.
துப்பாக்கிச் சூடு-நடந்தது என்ன?
மிசோரம் போலீஸ் போஸ்ட்டை 200க்கும் மேற்பட்ட அஸ்ஸாம் போலீசார் ஆயுதங்களுடன் வந்து கைப்பற்றினர். ஒரு போலீஸ் போஸ்ட்டை ஒருதரப்பு ஆக்கிரமிக்கும் போது என்ன செய்தாக வேண்டுமோ அதைத்தான் செய்திருக்கிறது மிசோரம் போலீஸ் படை. இத்தனைக்கும் மிசோரம் போலீசார் பேச்சுவார்த்தை மூலம் சுமூகத் தீர்வு காணத்தான் முயற்சித்தனர். ஆனால் அஸ்ஸாம் போலீசார்தான் முதலில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு மிசோரம் போலீசார் பதிலடி தந்தனர். நீங்கள் கால்பந்து விளையாடுகின்ற போது, வலது காலை மட்டும் பயன்படுத்த கூடாது என எப்படி சொல்ல முடியும்? அஸ்ஸாம் போலீசார் இயந்திர துப்பாக்கிகளுடன் வந்து தாக்குதல் நடத்தியதை அனைவருமே அறிவர். இவ்வாறு சோரம்தங்கா கூறினார்.
ஆயுதப் படை- பதுங்கு குழிகள்
இதனிடையே மிசோரம் மாநிலத்தை இந்தியாவின் பிறபகுதிகளில் இருந்து துண்டிக்கும் வகையில் எல்லையில் கட்டுமானங்களை அஸ்ஸாம் மாநில அரசு எழுப்பி இருக்கிறது. அத்துடன் பெருமளவில் ஆயுதப் படையினரும் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர். புல்லட் புரூப் அணிந்த வீரர்களின் ;பதுங்குகுழிகளையும் எல்லையில் அமைத்துள்ளது அஸ்ஸாம் என்கிற அதிரவைக்கும் குற்றச்சாட்டையும் மிசோரம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த எல்லை மோதல் தொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடந்த 28-ந் தேதி விசாரணை நடத்தி இருந்தார். இதில் அஸ்ஸாம் தலைமை செயலாளர் ஜிஷ்ணு பரூவா, டிஜிபி பாஸ்கர் ஜோதி மகந்தா, மிசோரம் தலைமை செயலர் மற்றும் டிஜிபி பங்கேற்றனர். இந்த ஆலோசனைக்குப் பின்னர்தான் அஸ்ஸாம் எல்லையில் கட்டுமானங்களையும் ஆயுதப் படையினரையும் குவித்திருக்கிறது என்கிறது மிசோரம். மேலும் மிசோரம் மாநிலத்துக்கு செல்ல கூடாது என அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா உத்தரவிட்டுள்ளதற்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
நாகாலாந்துடன் ஒப்பந்தம்
இதனிடையே எல்லை பதற்றத்தைக் குறைக்கும் வகையில் நாகாலாந்து மாநிலத்துடன் அஸ்ஸாம் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி நாகாலாந்து -அஸ்ஸாம் எல்லைகளில் இருந்து இரு மாநில போலீசாரும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளனர். அஸ்ஸாம்- நாகாலாந்து மாநிலங்கள் சுமார் 500 கி.மீ தூரம் எல்லையை பகிர்ந்து கொண்டிருக்கின்றன. அஸ்ஸாமின் சில பகுதிகளை நாகாலாந்து மாநிலத்துடன் இணைக்க வேண்டும் என்பது நாகா போராளிக் குழுக்களின் நீண்டகால கோரிக்கை. இது தொடர்பாக மத்திய அரசு அமைதி முயற்சிகளை படுதீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதேபோல் மேகலாயா எல்லையிலும் அஸ்ஸாம் மோதல் போக்கை கடைபிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.