பதற்றத்தில் பார்டர்கள்... அஸ்ஸாம் பா.ஜ.க. முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா மீது மிசோரம் அரசு எப்.ஐ.ஆர்.
அய்சால்: எல்லை பிரச்சனையில் அஸ்ஸாமில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க., பாஜக) முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா மற்றும் 6 உயர் அதிகாரிகள் மீது குற்றம்சாட்டி மிசோரம் அரசு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்துடன் மிசோரம், மேகாலயா, நாகாலாந்து மற்றும் அருணாச்சல் பிரதேச மாநிலங்களுக்கு நீண்டகாலமாக எல்லை பிரச்சனை இருந்து வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அஸ்ஸாம் மாநிலத்துடனேயே இந்த மாநிலங்கள் இணைந்து இருந்தன.
அப்போது 1875-ம் ஆண்டு ஒரு எல்லை பிரிவினை நடவடிக்கையை பிரிட்டிஷ் அரசு மேற்கொண்டது. மிசோரம் மக்களின் லுசாய் மலைப் பகுதி, அஸ்ஸாமின் கச்சார் மாவட்டமும் இணைக்கப்பட்டன. அப்போது மிசோரம் மக்களின் ஆலோசனைகளைப் பெற்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தமிழகம் உட்பட 19 மாநிலங்கள்-43 மத்திய அமைச்சர்கள் பங்கேற்கும் பிரமாண்ட யாத்திரை- பா.ஜ.க. மெகா ப்ளான்
எல்லை பிரச்சனை என்ன?
பின்னர் 1933-ம் ஆண்டு மற்றொரு எல்லைப் பிரிவினை நடவடிக்கையை பிரிட்டிஷார் மேற்கொண்டனர். இந்த 2-வது எல்லைப் பிரிவினை, மிசோரம் மக்களின் லுசாய் மலைப் பகுதி- மணிப்பூர் இடையேயானது. இதற்கு மிசோரம் மக்கள் அன்று முதல் இன்று வரை எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஏனெனில் மிசோரம் மக்களுடன் ஆலோசனை நடத்தாமல் இந்த 2-வது எல்லை பிரிவினை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பதுதான் காரணம். அஸ்ஸாமைப் பொறுத்தவரையில் 1933-ம் ஆண்டு எல்லை வரையறையை ஏற்க வேண்டும் என்கிறது. மிசோரம் மாநில மக்களோ 1875-ம் ஆண்டு எல்லை வரையறைதான் சரி என்கிறது. இதனால் அஸ்ஸாம்- மிசோரம் இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது.
மாநில போலீசாருக்கு இடையே மோதல்
இந்த எல்லை பிரச்சனையால் ஏற்பட்ட மோதல்கள் ஏராளம். இதில் உச்சகட்டமாக நிகழ்ந்ததுதான் அஸ்ஸாம் போலீசாருக்கும் மிசோரம் போலீசாருக்கும் இடையேயான துப்பாக்கிச் சூடு. இதில் அஸ்ஸாம் போலீசார் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். போலீஸ் எஸ்.பி. உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்தியாவில் மாநிலங்களின் போலீசார் பரஸ்பரம் துப்பாக்கிச் சூடு நடத்தியதும் இதுதான் முதல் முறை.
அறிவிக்கப்படாத பொருளாதார தடை
இதனால் கடும் கோபத்தில் இருக்கும் அஸ்ஸாம் மாநில மக்கள், மிசோரம் செல்லும் நெடுஞ்சாலைகளில் தடைகளை ஏற்படுத்தி உள்ளனர். மிசோரம் மீது அறிவிக்கப்படாத பொருளாதார தடையையும் அஸ்ஸாமியர்கள் அமல்படுத்தி உள்ளனர். இதனால் அஸ்ஸாம்- மிசோரம் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
அஸ்ஸாம் முதல்வர் மீது வழக்கு
இந்த நிலையில் எல்லை மோதல் தொடர்பாக அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா மற்றும் 6 உயர் அதிகாரிகள் மீது குற்றம்சாட்டி மிசோரம் போலீசார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். எல்லை மோதல்களை அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாதான் தூண்டிவிட்டார் என்கிறது இந்த முதல் தகவல் அறிக்கை. மேலும் 200க்கும் மேற்பட்ட அஸ்ஸாம் ஆயுதம் தாங்கிய போலீசார் அத்துமீறி மிசோரம் எல்லைக்குள் நுழைந்தனர்; மிசோரமின் ரிசர்வ் வனப் பகுதியில் கூடாரங்கள் அமைப்பதற்கான கட்டுமான பொருட்களுடன் அஸ்ஸாம் போலீசார் அத்துமீறி நுழைந்தனர்.
தற்காப்புக்காக துப்பாக்கி சூடு
இதனையடுத்தே மிசோரம் போலீசார் குழு அப்பகுதிக்கு விரைந்து சென்றது. அஸ்ஸாம் போலீசாருடன் பேச்சுவார்த்தை நடத்தி பதற்றத்தை தணிக்க மிசோரம் போலீசார் முயற்சித்துப் பார்த்தனர். ஆனால் அஸ்ஸாம் போலீசார் பேச்சுவார்த்தையை ஏற்காமல் முதலில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனையடுத்து மிசோரம் போலீசாரும் தற்காப்பு நடவடிக்கையாக துப்பாக்கிச் சூடு நடத்த நேரிட்டது என்கிறது மிசோரமின் முதல் தகவல் அறிக்கை.
அஸ்ஸாம்தான் காரணம்
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மிசோரம் முதல்வர் சோரம்தங்கா, அஸ்ஸாம் போலீசார்தான் முதலில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இது தொடர்பாக ஹிமந்த பிஸ்வா சர்மாவுடன் நான் பேசினேன். மிசோரம் மாநிலத்தைப் பொறுத்தவரையில் அமைதிவழியில்தான் தீர்வு காண வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். எல்லை பிரச்சனைகள் உள்ள மாநிலங்களின் முதல்வர்களுடன் தேவைப்பட்டால் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றார் சோரம்தங்கா.
மிசோரம் போலீசுக்கு நோட்டீஸ்
இதனிடையே எல்லை மோதல்கள் தொடர்பாக மிசோரம் போலீசாருக்கு அஸ்ஸாம் போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அந்த நோட்டீஸில் எல்லை மோதல்கள் தொடர்பாக இருமாநில போலீசாரும் இணைந்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளனர். இதேபோல் மிசோரம் எம்.பி. வன்லால்வேனாவுக்கும் அஸ்ஸாம் போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசுகையில், அஸ்ஸாம் போலீசாருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் வன்லால்வேனா பேசியதால் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் வன்லால்வேனா இந்த நோட்டீஸைப் பெறாததால் அவரது டெல்லி வீட்டில் அஸ்ஸாம் போலீசார் நோட்டீஸை ஒட்டிவிட்டுச் சென்றனர்.
போதைப் பொருள் கடத்தல் கும்பல்
ஏற்கனவே அஸ்ஸாம் போலீசார் மீது போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் இணைந்து மிசோரம் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி இருந்ததாக அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா குற்றம்சாட்டியிருந்தார். மியான்மரில் இருந்து மிசோரம் வழியாக போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு பஞ்சாப் மாநிலத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது; இந்த கும்பல்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியது என்பதற்கு வீடியோ ஆதாரங்களும் இருக்கின்றன என ஹிமந்த பிஸ்வா சர்மா குற்றம்சாட்டியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
மிசோரம் அரசு மறுப்பு
இந்த குற்றச்சாட்டை மிசோரம் மாநில அரசு திட்டவட்டமாக மறுத்திருந்தது. மிசோரமுக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சோதனையிடப்பட்டு பின்னர்தான் அஸ்ஸாம் எல்லைக்குள் அனுப்பப்படுகின்றன; அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது என சாடியிருந்தார் மிசோரம் முதல்வர் சோரம்தங்கா.