இந்திய மீனவர்களை மீட்க முயன்ற ராணுவ வீரரை சுட்டுக் கொன்றது வங்கதேச பாதுகாப்பு படை- எல்லையில் பதற்றம்
கொல்கத்தா: 3 இந்திய மீனவர்களை மீட்க முயன்ற எல்லை பாதுகாப்புப் படை வீரரை வங்கதேச பாதுகாப்புப் படையினர் சுட்டுப் படுகொலை செய்தனர். இதனால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
வங்கதேச எல்லையில் பத்மா நதியில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 5 இந்திய மீனவர்களை அந்நாட்டு எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். பின்னர் 2 மீனவர்களை விடுத்து நமது எல்லை பாதுகாப்புப் படையினரை இருதரப்பு கொடி அணிவகுப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தனர்.
இதனையடுத்து இன்று காலை 10.30 மணியளவில் 5 வீரர்களுடன் நமது எல்லை பாதுகாப்புப் படையினர் படகில் சென்று பத்மா நதியில் வங்கதேச எல்லை காவல்படையினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் வங்கதேச பாதுகாப்பு படையினர் இந்திய மீனவர்களை விடுவிக்க மறுத்துவிட்டனர்.
அத்துடன் நமது ராணுவ வீரர்களை கெரோ செய்யவும் தொடங்கினர். இதையடுத்து நிலைமை மோசமானதால் எல்லை பாதுகாப்புப் படையினர் நமது பகுதிக்கு திரும்பிவிட்டனர். அப்போது நமது ராணுவ வீரர்களை நோக்கி வங்கதேச பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் படுகாயமடைந்த 2 வீரர்க உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் தலைமை கான்ஸ்டபிள் விஜய் பஹன்சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு வீரர் முர்ஷிதாபாத் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்திய மீனவர்கள் 3 பேரும் இன்னமும் வங்கதேச பாதுகாப்புப் படையினரின் பிடியில் உள்ளனர். இதனால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது.