பிறவியிலேயே கர்ப்பப்பை, ஒரு கிட்னி இல்லை.. சோகத்தில் தீக்குளித்து உயிர்நீத்த 17 வயது மாணவி
பைரேலி: பிறவிலேயே தனக்கு கர்ப்ப்பையும், சிறுநீரகமும் இல்லாதது குறித்து தெரியவந்ததால் மனமுடைந்த 17 வயது மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் சுபாஷ் நகர் பகுதியைச் சேர்ந்த 17 வயதான 11ம் வகுப்பு மாணவி அவர். கடந்த சில மாதங்களுக்கு முன் உடல் நலப் பாதிப்பு காரணமாக அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சென்றார்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அல்ட்ரா சவுண்ட் சோதனை மேற்கொண்டனர். அதில் அவருக்கு ஒரு சிறுநீரகம் மட்டுமே இருப்பதும், கர்ப்பப்பை இல்லாததும் தெரிய வந்தது. இதனைக் கேள்விப்பட்ட அம்மாணவி அதிர்ச்சி அடைந்தார்.
இதனால் தனது மீதி வாழ்நாளை சிகிச்சைகளுடன் தான் கழிக்க வேண்டும் என்ற கவலையும் அவருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து சோகமான மனநிலையிலேயே இருந்துள்ளார். அவரை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள குடும்பத்தினர் முயற்சித்து வந்தனர்.
இந்த சூழ்நிலையில், கடந்த வெள்ளியன்று உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்காக தனது சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றார் அம்மாணவியின் தந்தை. வீட்டில் மாணவியும், அவரது அம்மாவும் மட்டும் இருந்துள்ளனர்.
அப்போது யாரும் எதிர்பார்க்காத சூழ்நிலையில் தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றி மாணவி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த அவரது அம்மா, அக்கம்பக்கத்தார் உதவியுடன் அம்மாணவியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
உரிய மனநல ஆலோசனை வழங்கப்படாததே மாணவியின் இந்த தற்கொலை முடிவிற்குக் காரணம் என மனநல மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தக்க சமயத்தில் மனநல ஆலோசனைகள் கொடுத்திருந்தால், மாணவி தற்கொலை எனும் தவறான முடிவிற்கு சென்றிருக்க மாட்டார் என்பது அவர்களது கருத்து.