எதிர்க்கட்சிகள் தர்ணா.. மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளே நாடாளுமன்றம் ஸ்தம்பிப்பு
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் துவங்கிய முதல் நாளே, ஆளுக்கொரு விவகாரத்திற்காக எதிர்க்கட்சிகள் தர்ணா நடத்தியதால் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பெரும் அமளி ஏற்பட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று ஆரம்பித்துள்ளது. ஆகஸ்ட் 10ம் தேதிவரை நடைபெற உள்ளது. இதில் முத்தலாக் மசோதா உள்ளிட்ட பல முக்கிய சட்டங்களை நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது.
ஆனால், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பிக்கள் பதாகைகளுடன் காலை முதல் தர்ணாவை தொடங்கினர். லோக்சபா துவங்கியதுமே அவையில் சபாநாயகர் இருக்கை முன்பாக தெலுங்கு தேசம் கட்சியினர் இதே கோரிக்கைக்காக தர்ணா செய்தனர்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வை விவாதிக்க கோரி பிற எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்த சபாநாாயகர் சுமித்ரா மகாஜன், முதலில் கேள்வி நேரம் முடியட்டும். பிறகு விவாதிக்கலாம் என்றார். இதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகளும் தர்ணா நடத்தினர்.
ராஜ்யசபாவிலும் இதேபோன்ற சூழல் நிலவியதால் முதலில் பகல் 12 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோதும் அமளி தொடர்ந்ததால், அவை மதியம் 2 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது. லோக்சபாவும் மதியம் 2 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது.
முன்னதாக நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கேட்டுக்கொண்டார்.