கல்யாண வீட்டில் கேமராமேன்களை தாக்கிய "பவுன்ஸர்"கள்... மன்னிப்பு கேட்டார் ஹர்பஜன் சிங்
ஜலந்தர்: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் திருமணத்தின் போது, கேமராமேன் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்குக்கும் (35), அவரது நீண்டகால தோழியும், பாலிவுட் நடிகையுமான கீதா பாஸ்ராவுக்கும் பஞ்சாப் மாநிலம் பக்வாரா நகரில் ஜலந்தரிலுள்ள சீக்கியர்களின் புனித தலமான குருத்வாராவில் நேற்று இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
திருமண விழாவுக்கு சச்சின் டெண்டுல்கர், மனைவி அஞ்சலியுடன் வருகை தந்து வாழ்த்தினார். திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
திருமணத்தின் போது, வீட்டுக்கு வெளியே நடந்த வைபவத்தை அங்கு குழுமியிருந்த சில புகைப்பட நிருபர்கள் தங்கள் கேமராவில் பதிவு செய்தனர். இதைப் பார்த்த அங்கிருந்த பவுன்சர்கள் சிலர் அவர்களை தாக்கியுள்ளனர். நிருபர்களின் கேமராவையும் வலுகட்டாயமாக வாங்கிக் வைத்துக் கொண்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த செய்தியாளர்கள் உடனடியாக அந்த இடத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைக் கேள்விப்பட்டு திருமண நிகழ்ச்சியின் இடையே வெளியே வந்த ஹர்பஜன் சிங் செய்தியாளர்களிடம் மன்னிப்பு கேட்டார். இதையடுத்து அவர்களின் தர்ணா முடிவுக்கு வந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.