ஆந்திராவில் 4 காலுடன் பிறந்த ஆண் குழந்தை... அதிசயத்தை பார்க்க மக்கள் கூட்டம்
ஆந்திரா மாநிலத்தில் பெண் ஒருவருக்கு 4 கால்களுடன் பிறந்துள்ள குழந்தையை பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து செல்கின்றனர்.
ராஜமகேந்திரவரம் : காக்கிநாடா அருகே பெண்ணிற்கு நான்கு கால்களுடன் பிறந்த ஆண் குழந்தை பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று மருத்துவமனையில் பார்த்து வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே ராஜமகேந்திரவரத்தில் பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மண்டபெட்டா மண்டலம் மாவட்டம் தபஸ்வரம் கிராமத்தை சேர்ந்த 25 வயது மணி என்ற பெண் மகப்பேறுக்காக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று பிற்பகலில் அவருக்கு பிரசவ வலி வந்ததையடுத்து குழந்தை பிறந்தது.
இது வழக்கமான விஷயம் தானே இதில் என்ன செய்தி என்கிறீர்களா. பெண், குழந்தையை பிரசிவிப்பது என்பது வழக்கமான விஷயம் தான், ஆனால் மணி பிரசிவித்த ஆண் குழந்தைக்கு 4 கால்கள் உள்ளன. வழக்கமாக இருப்பது போல இரண்டு கால்களும் வயிற்றை ஒட்டி இரண்டு கால்களும் குழந்தைக்கு உள்ளது.
10 லட்சத்தில் ஒருவருக்கே இது போன்ற அரிதான குழந்தை பிறக்கும் என்று குழந்தைகள் சிறப்பு சிகிச்சை மருத்துவர் மணிகயம்பா கூறியுள்ளார். தற்போதைய நிலையில் தாயும், சேயும் நலமாக உள்ளதாகவும். குழந்தை பாதுகாப்பாக என்ஐசியூவில் வைத்து பார்த்துக் கொள்ளப்படுவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனிடைய நான்கு கால்களுடன் பிறந்த ஆண் குழந்தையை பார்க்க மக்கள் மருத்துவமனையில் கூடி வருகின்றனர். கடந்த 2 நாட்களாக மருத்துவமனை அருகில் உள்ள பகுதிகளில் இருக்கும் மக்கள் குழந்தையை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.