லஞ்சம் கொடுக்க மறுப்பு... தள்ளு வண்டியை உருட்டி விட்ட அதிகாரிகள்... உடைந்த முட்டைகள்!!
இந்தூர்: கொரோனா தொற்று பரவல் பலரின் வேலைகளையும் பறித்து, அன்றாட சாப்பாட்டுக்கே திண்டாடும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. பலரும் காய்கறி விற்க, கட்டிட வேலைக்கு செல்வது, பால் விற்கச் செல்வது என்று கிடைத்த வேலைக்கு சென்று வருகின்றனர்.
பலரும் பொது முடக்கத்திலும் சாலைகளில் வந்து தங்களது வருமானத்திற்கு கடைகளை விரித்து வைத்து விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்பு இதே மாதிரி திறந்து வைத்து இருந்த பழக்கடையை அதிகாரி ஒருவர் உருட்டி விட்டார். இதில் பழங்கள் சாலைகளில் உருண்டு ஓடின. இதற்கு சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, அந்த அதிகாரி பணியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டு இருந்தார்.
இதேபோன்று, மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் வேறு மாதிரியான சம்பவம் நடந்துள்ளது. இந்தூரில் 14 வயது சிறுவன் தனது வருமானத்திற்காக முட்டை வியாபாரம் செய்து வந்தார். தள்ளு வண்டியில் முட்டை வைத்து விற்க சென்றார். அப்போது இடைமறித்த அதிகாரிகள் ரூ. 100 லஞ்சம் கேட்டுள்ளனர்.
ஆனால், அந்த சிறுவனிடம் பணம் இல்லை. மறுத்த காரணத்தால், கோபத்தில் அவனது தள்ளு வண்டியை கீழே தள்ளி விட்டுள்ளனர். இதில் முட்டை அனைத்தும் சாலையில் கொட்டி உடைந்தது. இந்த வீடியோ பெரிய அளவில் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதுகுறித்து அந்த சிறுவன் கூறுகையில், ''லஞ்சமாக 100 ரூபாய் கேட்டனர். அல்லது அந்த இடத்தில் இருந்து விலக வேண்டும் என்று என்னை வலியுறுத்தினர். பணம் கொடுக்காததால், எனது வண்டியை தள்ளினர்'' என்கிறார்.
இந்த கோபத்தை அந்த சிறுவனால் எப்படி வெளிக்காட்டுவது என்று தெரியவில்லை. வெள்ளை ஆடை அணிந்து இருக்கும் அந்த சிறுவன் அந்த இடத்தை விட்டுச் சென்ற அதிகாரிகளைக் காட்டி கோபத்தில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். இது அந்த வழியே சென்ற மக்களை உருக வைத்துள்ளது.
திமுக தலைமையில் 27-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்... காணொலி மூலம் நிகழும் சந்திப்பு
கொரோனாவைக் கட்டுப்படுத்த மத்தியப்பிரதேச அரசு லெப்ட் - ரைட் வழிமுறையை அமல்படுத்தியது. அதாவது, சாலையின் வலது பக்கம் இருப்பவர்கள் ஒரு நாள் கடையை திறக்க வேண்டும், மறுநாள் இடது பக்கம் கடையை திறக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதற்கு ஆளும் பாஜக அரசை பாஜகவினரே விமர்சித்து இருந்தனர். எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. சிறிய கடைகளை நடத்தி வருமானம் ஈட்டி வரும் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பறிப்பதா என்று கண்டனம் தெரிவித்து இருந்தனர். சிறு வியாபாரிகளை எந்த வகையிலும் துன்புறுத்தக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டு இருந்தும், சிறுவனின் தள்ளு வண்டியை தள்ளி விட்டு இருப்பதற்கு சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.