வெளிநாட்டுப் பெண்ணை காப்பாற்றி அவரை தாக்கியவரை விரட்டிப் பிடித்த டெல்லி 'பசங்க'
டெல்லி: டெல்லியில் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த பெண்ணிடம் இருந்து செல்போனை பறிக்க முயன்று அவரை தாக்கிய நபரை உள்ளூர் மாணவர்கள் குழு விரட்டிப் பிடித்துள்ளது.
உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் பணிநிமித்தமாக டெல்லிக்கு வந்துள்ளார். டெல்லி மால்வியா நகரில் உள்ள தோழி ஒருவரின் வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் அவர் கடந்த மாதம் 19ம் தேதி இரவு 10 மணிக்கு தோழியின் வீடு இருக்கும் பகுதியில் செல்போனில் பேசியபடியே நடந்து சென்றார். அப்போது சுராஜ் என்பவர் அந்த பெண்ணை பின்தொடர்ந்து வந்து அவரின் செல்போனை பறிக்க முயன்றார்.
அவர் செல்போனை தர மறுத்ததும் அவரை தாக்கினார். உடனே அந்த பெண் உதவி கேட்டு அலறினார். அவரின் அலறல் சப்தம் கேட்டு அங்குள்ள மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த மால்வியா நகர் மேனியாக்ஸ் என்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள் குழுவினர் ஓடி வந்தனர். அதற்குள் சுராஜ் அங்கிருந்து தப்பி ஓடினார்.
மாணவர்கள் சுராஜை விடாமல் துரத்திச் சென்றனர். சிறிது தூரம் ஓடிய பிறகு சுராஜ் காருக்கு பின்னால் ஒளிந்து கொண்டார். பின்னர் ஒன்றும் தெரியாதது போன்று வந்தார். ஆனால் மாணவர்கள் அவரை அடையாளம் கண்டு அவரை பிடித்து இழுத்துச் சென்றனர்.
இதற்குள் தகவல் கிடைத்து போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்தனர். மாணவர்கள் சுராஜை போலீசாரிடம் ஒப்படைத்தனர். மாணவர்கள் தினமும் இரவில் கால்பந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அன்று அவர்கள் பயிற்சியில் ஈடுபட்டது நல்லதாகிவிட்டது.
முதல்முறையாக இந்தியா வந்த இடத்தில் இப்படி நடந்ததால் பயந்து போன அந்த பெண் உடனே உஸ்பெகிஸ்தான் கிளம்ப முடிவு செய்தார்.