லீவு நாளில் பிக்-அப் இருப்பதாக ரீல்.. காமுக வேன் டிரைவரிடமிருந்து நைசாக தப்பிய பி.பி.ஓ பெண் ஊழியர்!
பெங்களூர்: பெங்களூரில் பணியாற்றும் ம.பியை சேர்ந்த, 23 வயது கால்சென்டர், பெண் ஊழியர் சனிக்கிழமை இரவு பலாத்காரம் செய்யப்பட்டார். ஓடும் வேனில் அவர் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குற்றவாளிகளை பிடிக்க காவல்துறை 3 தனிப்படைகளை உருவாக்கியது. போலீசாரிடம் அப்பெண் அளித்த வாக்குமூலம் அடிப்படையில், வேன் பயணித்த ரோடுகளில் உள்ள சிசிடிவிகளை கொண்டு ஆய்வு நடந்தது. சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகளையும், அந்த பெண் கொடுத்த பதிவு எண்ணை வைத்தும், அந்த வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சிக்கிய வேன்
இந்திராநகரை சேர்ந்த சங்கர் என்பவருக்கு சொந்தமான வேன் அது என்பதும் தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்தியபோது, எஸ்.ஆர்.எஸ். நிறுவனத்திடம் ஒப்பந்த அடிப்படையில் தனது வேன் இயங்கிவருவதாக தெரிவித்தார். எஸ்.ஆர்.எஸ் நிறுவனத்திடம் விசாரித்தபோது, பொம்மனஹள்ளியிலுள்ள, ஹெச்.ஜி.எஸ் என்ற பிபிஓ நிறுவனத்திற்கு வாடகைக்கு விட்டுள்ளதாக தெரிவித்தனர்.
அதிரடி கைது
சம்பவத்தன்று வேனை இயக்கியது யோகேஷ் என்ற டிரைவர் எனவும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் யோகேஷை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தனது உறவுக்காரர் சுனில் என்பவரோடு சேர்ந்து பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து சுனிலும் கைது செய்யப்பட்டார்.
காமுகன்
போலீசில் யோகேஷ் அளித்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த பலாத்காரம் சம்பவம் நடந்த நாள் காலையில், மற்றொரு பெண்ணை பலாத்காரம் செய்ய யோகேஷ் முயன்றிருப்பது அம்பலமாகியுள்ளது. ஆனால் சமயோஜித புத்தியால், அந்த இளம் பெண் தப்பிவிட்டாராம்.
லீவு நாளில் பிக்-அப்
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: குற்றவாளி யோகேஷ் பி.பி.ஓ நிறுவனத்திற்காக வேன் இயக்கி வந்தான். அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் வட இந்தியாவை சேர்ந்த 23 வயது பெண்ணுக்கு, சனிக்கிழமை காலை 5.45 மணி முதல், 9.45 மணிக்குள் சுமார் 20 முறை யோகேஷ் போன் செய்துள்ளான். அந்த பெண் போனை எடுத்தபோது, ரெடியாக இருங்கள், உங்களை பிக்-அப் செய்ய வந்துகொண்டுள்ளேன் என்று கூறியுள்ளான்.
வேனில் வந்தே ஆகனும்
ஆனால், அந்த பெண்ணுக்கு திங்கள் முதல் வெள்ளிவரைதான் அலுவலகத்தில், பணி ஒதுக்கப்பட்டிருந்தது. சனி, ஞாயிறு விடுமுறை தினங்களாகும். இதுகுறித்து யோகேஷிடம் அந்த பெண் கூறியுள்ளார். ஆனால், யோகேஷோ, இல்லை உங்களை பிக்-அப் செய்து கூட்டிவர எனக்கு ஆர்டர் தரப்பட்டுள்ளது என்று கூறியுள்ளான்.
மேனேஜருக்கு போன்
இதனால் அந்த பெண் குழப்பமடைந்துள்ளார். இதனிடையே மீண்டும் போன் செய்த யோகேஷ் ரெடியாக இருக்கும்படியும், அரை மணி நேரத்தில் அங்குவருவேன் என்றும் ஆர்டர் செய்யும் தொனியில் பேசியுள்ளான். மேலும் குழப்பமடைந்த அந்த பெண், அலுவலக மேலாளரை தொடர்புகொண்டு விவரம் கேட்டுள்ளார். மேலாளரோ, உங்களுக்கு இன்று விடுப்புதான் என்று கூறியதோடு, டிரைவர் வேறு யார் என்றோ நினைத்து உங்களுக்கு போன் செய்திருக்கலாம் என்று சமாதானம் கூறியுள்ளார்.
சமயோஜிதமாக தப்பினார்
இதன்பிறகு, யோகேஷ் போன் செய்தபோது, அந்த பெண் போனை எடுக்கவேயில்லையாம். பலமுறை யோகேஷ் போன் செய்துள்ளான். பல மிஸ்டுகால்களை அந்த பெண் ரிசீவ் செய்துள்ளார். அந்த பெண்ணை பலாத்காரம் செய்யும் திட்டத்தோடுதான், யோகேஷ் இவ்வாறு அழைத்துள்ளதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான். நல்லவேளையாக, அந்த பெண் சமயோஜிதமாக யோசித்து மேலாளரிடம் போனில் பேசியதால் பலாத்காரத்தில் இருந்து தப்பியுள்ளார். இவ்வாறு அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.