இந்த கோடையில் வெயில் மண்டையைப் பொளக்குமாம்.... வானிலை மையம் 'வார்னிங்'!
டெல்லி: கடந்த ஆண்டுகளைக் காட்டிலும், இந்த ஆண்டு கோடையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
‘இப்பவே கண்ணைக் கட்டுதே' என்ற ரேஞ்சில் வழக்கத்திற்கு மாறாக முன்னதாகவே வெயில் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டது. இப்போதே இப்படி என்றால் ஏப்ரல், மே மாதங்களில் வெயிலில் காய்ந்து கருவாடாகப் போகிறோம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது.
இந்நிலையில், மக்களை மேலும் சூடேற்றும் வகையில் இந்திய வானிலை ஆய்வு மையம் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரைக்கான வானிலை கணிப்பை வெளியிட்டுள்ளது.
வெப்பம் அதிகரிக்கும்...
அதில், ‘இந்த கோடை காலத்தில், நாட்டின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் வெயில் அளவு, இயல்பை விட ஒரு டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மேற்கூறிய பகுதிகள் அனல்காற்று வீசும் என கூறப்பட்டுள்ளது.
எல் - நினோ...
அதோடு, ‘வெயில் அதிகமாக இருப்பதற்கு ‘எல்-நினோ' தான் காரணம்' எனக் கூறுகிறது வானிலை ஆராய்ச்சி துறை. மேலும், ‘கடந்த ஆண்டு பசிபிக் பெருங்கடல் மீது உருவாகிய எல்-நினோ இன்னும் நீடிக்கிறது. இருப்பினும், வரும் நாட்களில் எல்-நினோ பலவீனம் அடையும்' என்றும் தெரிவித்துள்ளது.
அனல் காற்று மண்டலங்கள்...
வடக்கே டெல்லியில் இருந்து தெற்கே தெலுங்கானா வரையுள்ள மாநிலங்கள், அனல் காற்று மண்டலமாக கருதப்படுகிறது. இந்த மண்டலத்தில் மிதமான மற்றும் கடுமையான அனல் காற்று வீசுமாம்.
அதிகபட்ச வெயில்...
இந்த மண்டலத்தில், அதிகபட்ச வெயில் அளவு நிலவுவதற்கு 76 சதவீத வாய்ப்பு இருப்பதாக இந்த அறிவிப்பு கூறுகிறது.
வெயிலின் தாக்கம்...
கடந்தாண்டு வெயிலின் பாதிப்பால் இந்தியாவில் மட்டும் சுமார் 2,500க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அதிலும் குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வெயிலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.