ஹாஜி மலங் பாபா தர்காவை பராமரிக்கும் பிராமணக் குடும்பம்: இது தான் மதநல்லிணக்கம்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மலை ஒன்றின் மீது இருக்கும் ஹாஜி மலங் தர்காவை ஒரு பிராமணக் குடும்பத்தார் பராமரித்து வருகிறார்கள்.
மகாராஷ்டிரா மாநிலம் கல்யாணில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முலாங்காத்தில் இருக்கும் மலை மீது உள்ளது ஹாஜி மலங் பாபா சுபி தர்கா. உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள இந்துக்கள், முஸ்லீம்கள் மலை மீது உள்ள அந்த தர்காவுக்கு சென்று பிரார்த்தனை செய்கிறார்கள். அவ்வாறு பிரார்த்தனை செய்தால் தங்களது குறைகள் நீங்கும் என்று மக்கள் நம்புகிறார்கள்.
பாபா அப்துர் ரஹ்மான் மலங் அவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள மலங் தர்கா 300 ஆண்டு பழமை வாய்ந்தது. அந்த தர்காவை ஒரு பிராமணக் குடும்பம் பராமரித்து வருவது மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. தர்காவில் நடக்கும் பிரார்த்தனை கூட்டங்களை பிராமண பூசாரி ஒருவரும், பாபாவின் வழிவந்த முஸ்லீம் ஒருவரும் சேர்ந்து நடத்தி வருகிறார்கள்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பாபா மலங் தனது சீடர்களுடன் பிராமண்வாடி என்ற கிராமத்திற்கு வந்துள்ளார். அப்போது அவர் ஒர பிராமணக் குடும்பத்திடம் குடிக்கத் தண்ணீர் கேட்டுள்ளார். அந்த பிராமணரோ பாபா களைப்பாக இருப்பதை அறிந்து அவரும், அவரது சீடர்களும் ஓய்வு எடுக்க இடம் அளித்ததுடன் அவர்கள் குடிக்க பால் கொடுத்துள்ளார்.
பாபாவுக்கு பால் அளித்த பிராமணக் குடும்பத்தார் தான் அவர் அடங்கியிருக்கும் தர்காவை பராமரித்து வருகிறார்கள்.