2வது நாளாக பிரம்மோஸ் வெற்றிகரமாக சோதனை
டெல்லி: பிரம்மோஸ் ஏவுகணையை 2வது முறையாக ஏவி வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது ராணுவம்.
வெள்ளிக்கிழமைதான் கார் நிக்கோபார் தீவில் பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றும் இச்சோதனை நடந்தது. இந்த சோதனையும் வெற்றிகரமாக இருந்ததாக ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ராணுவத்திற்கான பிரம்மோஸ் ஏவுகணையாகும். தனது திட்ட இலக்கான 290 கிலோமீட்டர் தூரத்திற்கு ஏவுகணை சென்று இலக்கை துல்லியமாக தாக்கியதாக பாதுகாப்புத் துறை வட்டாரச் செய்திகள் தெரிவித்தன.
நேற்று நடந்தது 48வது சோதனையாகும். நேற்றைய சோதனையில் அனைத்து இலக்குகளும் துல்லியமாக எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து இந்த ஏவுகணையை உருவாக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
2.8 மேக் வேகத்தில் செல்லக் கூடிய இந்த ஏவுகணை 290 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கக் கூடியதாகும். நிலம், கடல், வானிலிருந்து எதிரிகளின் இலக்குகளைத் தாக்கக் கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.