திருப்பதி பிரம்மோற்சவம் செப்.26ல் தொடக்கம்: தங்க, வைர ஆபரணங்கள் மெருகேற்றும் பணி தீவிரம்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளதால், மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு அணிவிக்கப்படும் 502 தங்க, வைர ஆபரணங்கள் சுத்தம் செய்து, மெருகேற்றும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வரும் 26ஆம் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 4ஆம் தேதி வரை (9 நாட்கள்) நடக்க உள்ளது.
பிரம்மோற்சவ விழாவையொட்டி தினமும் காலையிலும், இரவிலும் ஒவ்வொரு வாகனத்தில் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிகள் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்.
கொடியேற்றம்
பிரம்மோற்சவ விழாவின் முதல் நாளான 26-ஆம் தேதி மாலை 6 மணியளவில் கோவில் வளாகத்தில் கொடியேற்று விழா நடக்கிறது. முதல்வர் சந்திரபாபுநாயுடு பட்டுவஸ்திரம் வழங்கி பிரம்மோற்சவ விழாவை தொடங்கிவைக்கிறார். அன்று இரவு 8 மணியில் இருந்து 9 மணி வரை பெரிய சேஷ வாகன ஊர்வலம் நடக்கிறது.
வாகனத்தில் மலையப்பசுவாமி
அதைத்தொடர்ந்து 27-ஆம் தேதி காலை 8 மணியில் இருந்து 9 மணி வரை சிறிய சேஷ வாகன ஊர்வலம், இரவு 9 மணியில் இருந்து 10 மணி வரை அம்ச வாகன ஊர்வலம், 28-ஆம் தேதி காலை 8 மணியில் இருந்து 9 மணி வரை சிம்ம வாகன ஊர்வலம், இரவு 9 மணியில் இருந்து 10 மணி வரை முத்துப்பந்தல் வாகன ஊர்வலம், 29-ஆம் தேதி காலை 8 மணியில் இருந்து 9 மணி வரை கல்ப விருட்ச வாகன ஊர்வலம், இரவு 9 மணியில் இருந்து 10 மணி வரை சர்வ பூபால வாகன ஊர்வலம்.
கருடசேவை
30-ஆம்தேதி காலை 8 மணியில் இருந்து 9 மணி வரை மோகினி அவதாரத்தில் பல்லக்கில் எழுந்தருளி நான்குமாட வீதிகளில் ஊர்வலம், இரவு 9 மணியில் இரவு 10 மணிவரை சிகர நிகழ்ச்சியான கருட சேவை உற்சவம் நடக்கிறது. அன்று தங்க கருட வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளி நான்குமாட வீதிகளில் உலா வரும் கண்கொள்ளா காட்சி நடக்கிறது.
தங்கத் தேரோட்டம்
அக்டோபர் 1-ஆம்தேதி காலை 8 மணியில் இருந்து 9 மணி வரை அனுமந்த வாகன ஊர்வலம், மாலை 5 மணியில் இருந்து 6 மணி வரை தங்கத் தேரோட்டம், இரவு 9 மணியில் இருந்து 10 மணி வரை யானை வாகன ஊர்வலம், 2-ஆம்தேதி காலை 8 மணியில் இருந்து 9 மணி வரை சூரிய பிரபை வாகன ஊர்வலம், இரவு 9 மணியில் இருந்து 10 மணிவரை சந்திர பிரபை வாகன ஊர்வலம், 3-ஆம்தேதி காலை 7.50 மணியளவில் தேரோட்டம், இரவு 9 மணியில் இருந்து 10 மணி வரை குதிரை வாகன ஊர்வலம், 4-ந்தேதி காலை சக்கர ஸ்நானம், இரவு கொடியிறக்க நிகழ்ச்சியுடன் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நிறைவடைக்கிறது.
தங்க, வைர ஆபரணங்கள்
வாகன வீதி உலாவின்போது உற்சவ மூர்த்திகளுக்கு தங்க, வைர ஆபரணங்களால் அலங்கரிப்பார்கள். மூலவருக்கு 120 ஆபரணங்களும், உற்சவ மூர்த்திகளுக்கு 382 ஆபரணங்களும் அணிவித்து அலங்காரம் செய்யப்படும்.
மெருகேற்றும் பணி
இந்த ஆபரணங்கள் பிரம்மோற்சவ விழா நாட்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு, பின்னர் பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும். இந்த ஆபரணங்களை சுத்தம் செய்து மெருகேற்றும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பணியில் தமிழ்நாட்டை சேர்ந்த பலர் ஈடுபட்டுள்ளனர்.
32 கிலோ ஆரம்
அதில், 32 கிலோ எடையிலான அஷ்டோத்ர சத்தியநாம ஆரம், அதேபோல் 32 கிலோ எடையிலான சகஸ்ர நாம ஆரம் ஆகியவை முக்கியமானதாகும். இந்த ஆபரணங்கள் பிரம்மோற்சவ விழாவின் சிகர நிகழ்ச்சியான கருடசேவை அன்று உற்சவர் மலையப்பசாமிக்கு அணிவிக்கப்படும்.
வைர கிரீடம்
மேலும் மூலவருக்கு வைர கிரீடம், வைர சங்கு, சக்கரம், ரத்தின கிரீடம், பச்சை வைரத்தால் தயாரிக்கப்பட்ட சங்கு, சக்கரம், வைர கடபத்திரம், வைகுண்ட அஸ்தம், 7 கிலோ எடையிலான வைர மகர கண்டி, தங்க பட்டு வஸ்திரம் ஆகியவைகளும் சுத்தம் செய்யப்பட்டு, மெருகேற்றப்படுகிறது.
ராஜகோபுரங்கள்
திருப்பதி ஏழுமலையான் கோவில் கோபுரங்கள் 7 நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை. முகப்பு வாயிலில் உள்ள ராஜகோபுரம் 13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது தரைமட்டத்தில் இருந்து 50 அடி உயரத்தில் 5 அடுக்குகளுடன் அமைந்துள்ளது.
இதனை அடுத்து உள்ள வெள்ளி வாயில் கோபுரம் 3 அடுக்குகளை கொண்டது. இந்த கோபுரம் 12-ம் நூற்றாண்டில் தொடங்கி 13-ம் நூற்றாண்டில் கட்டி முடிக்கப்பட்டது.
தங்க வண்ணம்
இதுவரை 2 கோபுரங்களுக்கும் வெள்ளை பூச்சு மட்டுமே பூசி வந்தனர். இனி இந்த 2 கோபுரங்களும் சீரமைக்கப்பட்டு புதுப்பிக்கப்படுகிறது. பின்னர் அதற்கு தங்க வண்ணம் பூசப்படுகிறது. பழமை மாறாமல் இந்த கோபுரங்களை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் முகப்பு வாயிலில் உள்ள ராஜகோபுரம் புதுப்பிக்கப்பட்டு வண்ணம் பூசும் பணி நடைபெறும். அதன் பிறகு வெள்ளி வாயிலில் உள்ள கோபுரம் புதுப்பிக்கப்படும். இனி 2 கோபுரங்களும் தங்க நிறத்தில் ஜொலிக்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.