இறந்தும் 6 பேரை வாழ வைத்த 'குண்டூர் மணிகண்டா'
விஜயவாடா: ஆந்திராவில் விபத்தில் சிக்கி மூளைச் சாவு அடைந்த 22 வயது வாலிபரின் உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் தோட்டா மணிகண்டா(22). கார் டிரைவர். அவர் கடந்த 3ம் தேதி பைக்கில் செல்கையில் விபத்தில் சிக்கினார். உடனே மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து மணிகண்டனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தார் முன்வந்தனர். இதைத் தொடர்ந்து அவரது இதயம், கல்லீரல், கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் நுரையீரல் ஆகியவை கடந்த வெள்ளிக்கிழமை தானமாக பெறப்பட்டது. அதில் அவரின் நுரையீரலில் ஒன்றும், இதயமும் சென்னையில் உள்ள போர்டிஸ் மருத்துவமனைக்கு உடனே அனுப்பி வைக்கப்பட்டது.
போர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 20 வயது வாலிபருக்கு அந்த நுரையீரலும், இதயமும் பொருத்தப்பட்டது. மணிகண்டனின் கல்லீரல் தனி விமானம் மூலம் ஹைதராபாத்தில் உள்ள குளோபல் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு மருத்துவமனையை அடைந்த கல்லீரல் 47 வயது ஆண் நோயாளிக்கு பொருத்தப்பட்டது.
மணிகண்டனின் சிறுநீரகங்கள் குண்டூரில் உள்ள 2 பேருக்கு பொருத்தப்பட்டது. மேலும் அவரது கண்கள் குண்டூரில் உள்ள சங்கரா கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு அளிக்கப்பட்டது.
இதையடுத்து சனிக்கிழமை மதியம் 12.30 மணிக்கு மணிகண்டனின் உடல் மருத்துவமனையில் இருந்து சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.