புதிய ரூ.2000 நோட்டுதான் லஞ்சமாக வேண்டும்.. அடம்பிடித்த கல்வி அதிகாரியை மாட்டிவிட்ட ஆசிரியர்
புதிய ரூ. 2000 நோட்டுதான் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று கேட்டு அடம்பிடித்த கல்வித்துறை அதிகாரி லஞ்ச ஒழிப்பி துறையினரிடம் சிக்கினார்.
புனே: பதவி உயர்வு வேண்டுமானால் புதியதாக வெளியிடப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டுக்களாக 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால்தான் பதவி உயர்வு கொடுக்கப்பேன் என்று பிடிவாதம் பிடித்த கல்வி அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.
மாராட்டிய மாநிலம் கோலாப்பூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் 52 வயதான சோம்நாத். இவர் தனக்கு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வேண்டும் என்று கோலாப்பூர் மாவட்ட கல்வி அதிகாரியான சந்திரகாந்த் ஏக்நாத்திடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.
இந்த மனுவை பரிசீலித்த கல்வித்துறை அதிகாரி ஏக்நாத் 40 லட்சம் லஞ்சமாக கேட்டுள்ளார். பணத்தைக் கொடுத்தால்தான் பதவி உயர்வு என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனால் பணத்தை புரட்டுவதற்காக முற்பட்ட சோம்நாத்திடம், கொடுக்கும் பணம் முழுவதும் அரசு அண்மையில் வெளியிட்ட 2000 ரூபாய் நோட்டுக்களாகத்தான் இருக்க வேண்டும் என்று கண்டிப்பாக கூறியுள்ளார்.
கல்வி அதிகாரியின் கண்டிப்பால் கடுப்பாகிப் போன சோம்நாத், நேராக சென்று கோலாப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். புகாரை விசாரித்த போலீசார் சோம்நாத்திற்கு சில யோசனைகள் சொல்லி அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் யோசனைப்படி, சோம்நாத் தனது நண்பர்கள், உறவினர்கள், வங்கி என அனைத்து வழிகளிலும் 35 ஆயிரம் ரூபாய் பணத்தை திரட்டியுள்ளார். அந்தப் பணத்தை நேற்று மாலை 6 மணியளவில் கல்வி அதிகாரி ஏக்நாத்தை சந்தித்து சோம்நாத் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய வேகத்தில் மகிழ்ச்சி பொங்க எண்ணிக் கொண்டிருந்த ஏக்நாத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
பின்னர், அவரிடம் இருந்த பணம் முழுவதையும் போலீசார் பறிமுதல் செய்ததோடு, வழக்கு பதிவு செய்து அவரது வீட்டிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.