எல்லை தாண்டிய காதல்... விசா கிடைக்காததால் தவிக்கும் பாகிஸ்தான் பெண்- சுஷ்மா மனம் வைப்பாரா?
விசா கிடைக்காததால் லக்னோவில் இருக்கும் தனது காதலரை மணக்க முடியவில்லை என்று பாகிஸ்தான் இளம்பெண் தெரிவித்துள்ளார்.
லக்னோ: பாகிஸ்தானை சேர்ந்த இளம்பெண் லக்னோவில் இருக்கும் தனது காதலை மணக்க விசா அளிக்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கராச்சியை சேர்ந்த 25 வயது பெண் சதியா, லக்னோவில் உள்ள 28 வயது சையது என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் திருமணம் ஆகஸ்ட் 1ம் தேதி நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதற்காக சதியா, அவருடைய பெற்றோர் மற்றும் சகோதரர் விசா கோரி இந்திய ஹை கமிஷனை அணுகியுள்ளார்.
இஸ்லாமாபாத்தில் உள்ள ஆணையத்தை தொடர்பு கொண்டு இரண்டு முறை விண்ணப்பித்தும் இவர்களுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. இதற்கான உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை என்று ஓராண்டில் மட்டும் இரண்டு முறை விசா நிராகரிக்கப்பட்டுள்ளதால், மிகவும் வருத்ததில் உள்ளதாக சதியா தெரிவித்துள்ளார்.
கோரிக்கை
பாகிஸ்தான் இந்தியா இடையேயான நல்லுறவு இல்லாததால் எங்களுக்கு விசா தர மறுப்பது எந்த வகையில் நியாயம், நீங்கள் மட்டுமே என்னுடைய நம்பிக்கை. எனக்கு விசா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிற்கு சைதா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
திருமணம் முடிவு
ஏற்கனவே கடந்த 2012ம் ஆண்டு சதியா குடும்பத்தினர், லக்னோ வந்திருந்த போது இருவரின் திருமணம் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருமணம் முடிவு செய்யப்பட்ட பின்னர் இருவரும் தொலைபேசியில் கலந்துரையாடி காதலித்துள்ளனர்.
அதிருப்தி
எல்லாம் நல்ல நிலையில் சென்று கொண்டிருக்கிறது, என்று எனது திருமணத்தை நினைத்து கனவு கண்டு கொண்டிருந்தேன். ஆனால் விசா கிடைக்காமல் எனது திருமணத்திற்கு தடை ஏற்படும் என்று நினைத்துப் பார்க்கவேயில்லை என்று சைதா கூறியுள்ளார்.
வேண்டுகோள்
எனவே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்ற சதியா வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் மணமகன் சையது இந்த விவகாரத்தில் சுஷ்மா ஸ்வராஜ் தலையிட்டு திருமணத்தை கைகூட வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.