மும்பை மாநகராட்சித் தேர்தல் முடிவுகள்: சிவசேனா முன்னிலை- பாஜகவுக்கு பின்னடைவு!
மகாராஷ்டிர மாநிலம் மும்பை மாநகராட்சித் தேர்தலில் சிவசேனா கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. கடும் பின்னடைவை சந்தித்துள்ள பாஜக அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.
மும்பை : மும்பை மாநகராட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் சிவசேனா கட்சி முன்னிலை வகித்து வருகிறது. பாஜக பலத்த பின்னடைவை சந்தித்து வருவதாக் அக்கட்சி தலைவர்கள் அதிர்ச்சியடைந்து போயுள்ளனர்.
கடந்த 2014-இல் மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பாஜக- சிவசேனா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியது. அதேநேரத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக அவ்வப்போது சிவசேனா கருத்து தெரிவித்து வருகிறது.
இதனால் கோவா உள்ளிட்ட மாநில சட்டசபைத் தேர்தலில் சிவசேனா, பாஜகவுடன் கூட்டணி அமைக்கவில்லை. இந்நிலையில் பிருஹன் மும்பை மாநகராட்சித் தேர்தல் கடந்த திங்கள்கிழமை நடந்து முடிந்தது.
மொத்தமுள்ள 227 வார்டுகளுக்கு 2,200-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலிலும் இருகட்சிகளும் தனித்து போட்டியிட்டன. 20 ஆண்டுகளுக்கு பின்னர் இரு கட்சிகளும் தனித்து களம் கண்டன,
இன்று காலை முதல் வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதுவரை 75 வார்டுகளில் சிவசேனா கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 39 வார்டுகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இது பாஜகவுக்கு கடுமையான பின்னடைவாகும்.
இந்தத் தேர்தல் பாஜக, சிவசேனா ஆகியவற்றுக்கிடையே பலப்பரீட்டையாகவே இருந்தது. உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா உள்ளிட்ட சட்டசபை தேர்தல்கள் நடைபெற்று கொண்டிருக்கும்போது மும்பை உள்ளாட்சி தேர்தல் முடிவானது பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.