லண்டனில் உள்ள திப்பு சுல்தான் மோதிரத்தை மீட்க வேண்டும்- நாடாளுமன்றத்தில் கோரிக்கை
டெல்லி: லண்டனில் 1 கோடி ரூபாய்க்கு ஏலம் போன திப்பு சுல்தானின் மோதிரத்தை இந்தியாவுக்கு திரும்ப கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுதொடர்பாக டெல்லி நாடாளுமன்றத்தில் பேசிய சமாஜ்வாடி கட்சி எம்.பி. சவுத்ரி முனவர் சலீம், திப்பு சுல்தானின் மோதிரத்தை கண்டிப்பாக இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறினார்.
அவர் கூறுகையில், "திப்பு சுல்தானின் மோதிரத்தில் ராமரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளதால் அதை ஏலத்தில் எடுத்தவரிடம் இருந்து விலைக்கு வாங்கி இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும்" என்று தெரிவித்தார்.
இவரது கோரிக்கைக்கு காங்கிரஸ் எம்.பி. விஜய் ஜவஹர்லால் தர்தா, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. பந்தோபாத்யாய் மற்றும் பா.ஜ.க எம்.பி. தருண் விஜய் ஆகியோர் ஆதரவு தெரிவித்து பேசினர்.
வெள்ளையர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய திப்பு சுல்தானின் மோதிரத்தை லண்டனில் உள்ள ஒரு நிறுவனம் சமீபத்தில் ஏலத்தில் விட்டது. இந்த மோதிரத்தை ஒருவர் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.