கடும் போராட்டங்களுக்கு மத்தியில் குவஹாத்தியில் மீண்டும் வந்த இணையதள சேவை.. ஊரடங்கு உத்தரவு தளர்வு
குவாஹாத்தி: குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அஸ்ஸாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் குவஹாத்தியில் இணையதள சேவைகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் ஷில்லாங்கில் ஊரடங்கு உத்தரவும் தளர்வு செய்யப்பட்டது.
குடியுரிமை மசோதாவுக்கு எதிரான போராட்டம் வடகிழக்கு மாநிலங்களிலிருந்து மேற்கு வங்கம், டெல்லி, தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது.
இதையொட்டி அஸ்ஸாமில் இணையதள சேவைகள் நிறுத்தப்பட்டன. விமானம், ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. குவஹாத்தியிலும் இணையதள சேவைகள் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் குவஹாத்தியில் இயல்பு நிலை திரும்பியதால் அங்கு இணையதள சேவைகள் மீண்டும் கொடுக்கப்பட்டன.
அது போல் குவஹாத்தியில் ஊரடங்கு உத்தரவு திரும்ப பெறப்பட்டது. அது போல் மேகாலயா மாநிலம் ஷில்லாங்கிலும் ஊரடங்கு உத்தரவு திரும்ப பெறப்பட்டது. நாகாலாந்தில் நாகா மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் 6 மணி நேரம் கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.