வரலாற்று அநீதியை சரி செய்வதற்கே குடியுரிமை சட்ட திருத்தம்: பிரதமர் மோடி
டெல்லி: வரலாற்று ரீதியாக இழைக்கப்பட்ட அநீதியை சரி செய்வதற்கும் அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக வாழ்கிற மக்களுக்கு பாஜக அளித்த பழைய வாக்குறுதியை நிறைவேற்றவும் குடியுரிமை சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தேசிய மாணவர் படை(என்சிசி)யின் அணிவகுப்பு இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த காலங்களில் ஜம்மு காஷ்மீர் பிரச்சனையை சட்டம் ஒழுங்கு பிரச்சனையாகவே அரசுகள் பார்த்தன. நம்முடனான 3 யுத்தங்களில் அண்டை நாடான பாகிஸ்தான் தோல்வியை சந்தித்துள்ளது.
ஆனாலும் இந்தியாவுக்கு எதிரான நிழல் யுத்ததத்தை தொடர்ந்து பாகிஸ்தான் நடத்தி வருகிறது. முந்தைய அரசுகள் செயல்படாமல் இருந்தன. நமது ராணுவத்தினர் தயார் நிலையில் இருந்தபோதும் அவர்களால் மேற்கொண்டு எதுவும் செய்ய இயலாமல் இருந்தது.
தற்போது ஜம்மு காஷ்மீரில் மட்டுமல்ல.. நாட்டின் இதர பகுதிகளிலும் அமைதி நிலவுகிறது. பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட வடகிழக்கு மாநில மக்களின் விருப்பங்களை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. வரலாற்று ரீதியாக இழைக்கப்பட்ட அநீதியை சரி செய்வதற்கும், அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக வாழும் மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்ற பாஜகவின் பழைய உறுதி மொழியை நிறைவேற்றவும் குடியுரிமை சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.