"புல்லட் புரூப்" எல்லை கேட்... பாக். தாக்குதலைத் தடுக்க அமைக்கிறது இந்தியா!
டெல்லி: பாதுகாப்பு நடவடிக்கையாக பாகிஸ்தானுடனான எல்லையில் உள்ள மூன்று இடங்களில் உள்ள நுழைவாயிலில் குண்டு துளைக்காத கேட் அமைக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையே வாகா எல்லை உள்ளது. இங்கு கடந்த நவம்பர் மாதம் 2ம் தேதி பாகிஸ்தானுக்குட்பட்ட பகுதியில் நடந்த கொடி இறக்க நிகழ்ச்சியின்போது தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில், பாகிஸ்தானைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் இந்திய தரப்பிற்கு எந்த ஒரு சேதாரமும் இல்லை.
எனினும், இச்சம்பவத்தை அடுத்து எல்லை தாண்டிய தாக்குதலை தடுக்க பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் அட்டாரி, ஹுசைனிவாலா, சட்கி ஆகிய பகுதிகளில் உள்ள இந்திய -பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள நுழைவாயில்களில் குண்டு துளைக்காத கேட்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.
இந்த மூன்று இடங்களுமே பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ளன. இது தொடர்பாக, அமிர்தசரஸ் பிரிவு இந்திய எல்லை பாதுகாப்பு படையின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் எம்.எப். பரூக்கி, ‘பாகிஸ்தான் ராணுவத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மட்டுமே இந்திய பாதுகாப்பு படை நம்பியிருக்காது' எனக் கூறியதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
எனவே, எந்தபுறத்தில் இருந்தும் பாகிஸ்தான் பகுதியில் இருந்து தாக்குதலுக்கு வழியுள்ள நிலையில், அட்டாரி எல்லையில் இரண்டு புறமும் குண்டு துளைக்காத கண்ணாடிகளை நிறுவுவதற்கு தான் முன்மொழிந்துள்ளதாகவும் பரூக்கி கூறியதாக அதில் செய்தி வெளியாகியுள்ளது.
வாகா எல்லையைப் போலவே, இந்த பகுதிகளிலும் நடைபெறும் அணிவகுப்பு நிகழ்ச்சியை காண்பதற்கு அதிகமான மக்கள் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.