இந்தியா கோபம்.. இந்த வருட குடியரசு தினத்தில் பாக். ராணுவ வீரர்களுக்கு ஸ்வீட் கிடையாது!
தொடரும் எல்லை மீறிய துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் - பாக் வீரர்களுடன் இனிப்பை பரிமாறிக்கொள்ள மறுத்த இந்திய வீரர்கள்
பூஞ்ச்: பாகிஸ்தான் வீரர்கள் தொடர்ந்து எல்லை தாண்டிய துப்பாக்கிச்சூடுகளை நடத்தி வருவதால் குடியரசு தின நாளான இன்று இந்திய வீரர்கள் அவர்களுடன் இனிப்புகளை பரிமாறிக்கொள்வதை தவிர்த்து விட்டனர்.
இந்தியா, பாகிஸ்தான் இடையே எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே ரோந்து மற்றும் பாதுகாப்புப் பணியில் இரு நாட்டு வீரர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவின் 69-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பூஞ்ச் அருகே எல்லைக் கட்டுப்பாடு இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் பரஸ்பரம் வாழ்த்துக்களை தெரிவித்து இனிப்புகளை பரிமாறிக் கொள்வது வழக்கம்.
எல்லைப் பகுதியில் எப்போதும் அமைதி நிலவவும், இரு நாடுகளுக்கிடையே நல்லுறவையும் வெளிப்படுத்தவும் இந்த இனிப்பு பரிமாற்றி கொள்ளும் சடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், சமீபகாலமாக தொடர்ந்து பாகிஸ்தான் வீரர்கள் எல்லைத்தாண்டிய தூப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டு வருவதால் இந்த முறை அவர்களுடன் குடியரசு தினவிழாவை கொண்டாட இந்திய வீரர்கள் மறுத்து விட்டனர்.
மேலும் எல்லையில் பாகிஸ்தான் வீரர்களுடன் இனிப்புகளை பரிமாறிக்கொள்ளவும் இந்திய வீரர்கள் மறுத்துவிட்டனர். பல வீரர்களும், அப்பாவி மக்களும் அவர்களின் தாக்குதலுக்கு இரையாவதால் இந்த முடிவை இந்திய வீரர்கள் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.