10 கிலோ ஹெராயினுடன் பாகிஸ்தானிலிருந்து ஊடுறுவிய 4 கடத்தல்காரர்களை சுட்டுக் கொலை
பெரோஸ்பூர்: பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் கடத்தல்காரர்கள் 4 பேரை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அவர்களிடம் இருந்த 10 கிலோ ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் செக்டரில் உள்ள மெஹந்திபூர் எல்லை சோதனைச் சாவடி அருகே யாரோ நடமாடுவது போன்று இருந்தது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போதைப் பொருளுடன் வந்த 4 பேரை எல்லை பாதுகாப்பு படையினர் இன்று அதிகாலை 4.40 மணிக்கு சுட்டுக் கொன்றனர்.
அதில் இருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள், இருவர் இந்தியர்கள். பாகிஸ்தான் எல்லையில் இருந்து இந்தியாவுக்குள் வந்தவர்களில் ஒருவர் திரும்பிச் சென்றுவிட்டார். சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியர்களின் அடையாளம் இன்னும் தெரியவில்லை என்று எல்லை பாதுகாப்பு படையின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் தாப்பா தெரிவித்துள்ளார்.
அந்த நான்கு பேர் வைத்திருந்த 10 கிலோ ஹெராயின் போதைப் பொருள், இரண்டு துப்பாக்கிகள், ஒரு பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டதில் காயம் அடைந்த பாகிஸ்தானியர் ஒருவர் அவரது நாட்டிற்கே திரும்பிச் சென்றுவிட்டார் என்று கூறப்படுகிறது.