பிரதமரை மரியாதையாக குறிப்பிடாத ராணுவ வீரரின் 7 நாள் சம்பளம் கட்!
பிரதமரை "மாண்புமிகு", "ஸ்ரீ" என்று குறிப்பிடாததால் ராணுவ வீரரின் 7 நாள் ஊதியம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
டெல்லி : பிரதமரை "மாண்புமிகு", "ஸ்ரீ" என்று குறிப்பிடாததால் ராணுவ வீரரின் 7 நாள் ஊதியம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரதமரை அவமரியாதை செய்துவிட்டதாக கூறி ராணுவ வீரர் மீது இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 21ம் தேதி மேற்குவங்கத்தின் நடியாவில் உள்ள மஹத்புரில் பிஎஸ்எஃப்ன் 15வது பட்டாலியன் தலைமையகம் உள்ளது. இங்கு ஜவான்களுக்கான தினசரி பயிற்சியான ஜீரோ பரேடு நடந்துள்ளது.
பரேடின் போது கான்ஸ்டபிள் சஞ்சீவ் குமார் "மோடி நிகழ்ச்சி" என்று குறிப்பிட்டு பேசியுள்ளார். சஞ்சீவ் குமாரின் இந்த பேச்சு பிரதமரை அவமரியாதை செய்வதாக உள்ளதாக பட்டாலியன் உயர் அதிகாரி கருதியுள்ளார்.
இதனால் அனுப் லால் பஹத், சஞ்சீவ் குமார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு எடுத்துள்ளார். இதன்படி சஞ்சீவ்குமார் மீது பிரிவு 40ன் கீழ் சட்டத்திற்கு புறம்பாக நன்னடத்தை மீறி செயல்பட்டதாக கூறி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சஞ்சீவ் குமாரின் 7 நாட்கள் ஊதியமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாண்புமிகு என்று குறிப்பிடாததற்காக ராணுவ வீரர் மீது பாய்ந்துள்ள இந்த நடவடிக்கையானது மற்ற ராணுவ வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.