ராணுவ வீரர்கள் பட்டினியாக வேலை பார்க்கிறார்களா.. விசாரணைக்கு உத்தரவிட்ட ராஜ்நாத்சிங்
ஸ்ரீநகர்: உணவு தரப்படவில்லை என குறை கூறி வீடியோ வெளியிட்ட ராணுவ வீரரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜம்மு-காஷ்மீர்-பாகிஸ்தான் எல்லையில், பணியாற்றும் எல்லை பாதுகாப்பு படை வீரர் தேஜ் பகதூர் யாதவ் என்பவர் 29வது பட்டாலியனில் பணியாற்றி வருகிறார்.
கடுமையான உறை பனி நிலவும் காஷ்மீரில் ஒரு வாய் சாப்பாட்டைக் கூட நிம்மதியாக சாப்பிட முடியாமல் பட்டினியாக, பணியாற்றி வருவதாக இவர் வீடியோ ஒன்றில் வெளியிட்ட தகவல் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊழல் காரணமாக உணவு பண்டங்கள் திருடப்பட்டுவதால், சரியாக சாப்பாடு தராமல் அதிகாரிகள் வேலை வாங்குவதாக அவர் அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார். இதையடுத்து எல்லை பாதுகாப்பு படையினர் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், டிஐஜி ரேங்கிலுள்ள அதிகாரி தலைமையிலான விசாரணைக்கு உத்தரவிட்டார்.
எனவே 29வது பட்டாலியனின் தலைமையிடமான பூஞ்ச் நகரத்திற்கு அவர் அழைத்துவரப்பட்டுள்ளார். அங்கு வைத்து விசாரணஐ நடைபெற்று வருகிறது. இதனிடையே தேஜ் பகதூர், ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் குற்றம்சாட்டின.
இதை டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், தான் ஒழுங்கீனத்தில் ஈடுபடும் நபர் இல்லை என்றும் 14 பதக்கங்களை பெற்ற சிறந்த வீரன் என்றும் தெரிவித்துள்ளார்.