பஞ்சாப் எல்லையில் 3 பாக். கடத்தல்காரர்கள் சுட்டுக் கொலை! 24 கிலோ ஹெராயின் பறிமுதல்!!
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநில எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த 3 கடத்தல்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தில் இந்திய- பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் நேற்று இரவு எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாகிஸ்தான் பகுதியில் இருந்து முல்லாபுர் கிராமம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ சிலர் முயன்றனர்.
அவர்களை எல்லை பாதுகாப்பு படையினர் பார்த்துவிட்டனர். இதைத் தொடர்ந்து திடீரென கடத்தல்காரர்கள் இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களும் எதிர் தாக்குதல் நடத்தினர்.
இதில் 3 கடத்தல்காரர்கள் உயிரிழந்தனர். அவர்களின் உடைமைகளை சோதனையிட்ட போது 24 கிலோ ஹெராயின் போதைப் பொருள், ஏகே 47 ரக துப்பாக்கி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட ஹெராயினின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ120 கோடி.